சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸ் கைது
1 min read
Former temple member Sankara Das arrested in Sabarimala gold scam case
16.1.2026
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மோசடி தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முதன்மை தந்திரி, முன்னாள் எம்.எல்.ஏ., திருவிதாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினரான சங்கரதாசும் சேர்க்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சங்கரதாஸ் கைது செய்யப்படாத சம்பவத்திற்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து விமர்சனங்களை முன் வைத்தது. மேலும் சங்கரதாசின் மகன் காவல் துறையில் உயர் பதவியில் இருப்பதால் அவரது கைதை தாமதம் செய்து வருவதாக அதிருப்தியையும் வெளிப்படுத்தியது.
இதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் எஸ்.பி. சசிதரன் தலைமையில் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை கைது செய்தனர். அதே சமயத்தில் அவரது உடல் நலம் கருதி மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் மருத்துவமனையிலேயே தீவிர கண்காணிப்பில் உள்ளார். தங்கம் மோசடி வழக்கில் கைது செய்யப்படும் 12-வது நபர் சங்கரதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.