மனைவி மற்றும் 3 உறவினர்களை சுட்டுக்கொன்ற இந்தியர்
1 min read
Indian man shoots wife and 3 relatives dead
25.1.2026
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், லாரன்ஸ்வில் பகுதியில் நடந்த குடும்பத் தகராறில், இந்திய வம்சாவளி நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று உறவினர்களைச் சுட்டுக்கொன்றுள்ளார்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டாவில் தனது மனைவி மீமூ டோக்ரா (43) மற்றும் 12 வயது மகனுடன் வசித்து வந்தவர் 51 வயதான விஜய் குமார்.
கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மூவரும் அதே மாகாணத்தில் லாரன்ஸ்வில் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கு வைத்தும் இருவரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜய் குமார், அமெரிக்க நேரப்படி நேற்றுமுன்தினம் அதிகாலை 2.30 மணிக்கு மனைவி மீமூ டோக்ரா, உறவினர்களான கௌரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகியோரை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் வீட்டில் விஜய் குமாரின் மகன் உட்பட 3 குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்கள் பயந்துபோய் ஒரு அலமாரிக்குள் ஒளிந்து கொண்டனர்.
அவர்களில் ஒரு குழந்தை 911 அவசர எண்ணிற்கு அழைத்துத் தகவல் கொடுத்த நிலையில் போலீசார் அங்கு விரைந்து விஜய் குமாரை கைது செய்தனர். குழந்தைகள் மூவரும் காயமின்றி தப்பினர்.
அட்லாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக தெரிவித்துள்ளது.