இந்தியா, இலங்கை இடையே ஆழமான ஆன்மிகத் தொடர்பு; பிரதமர் மோடி
1 min read
Deep spiritual connection between India and Sri Lanka: PM Modi
5.2.2026
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஆழமான நாகரிக மற்றும் ஆன்மிக தொடர்புகள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை இடையிலான ஆன்மிகம் மற்றும் கலாசார உறவை மேம்படுத்தும் வகையில், புனித தேவ்னிமோரி புத்தர் நினைவுப்பொருட்கள் கண்காட்சி இலங்கையில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி பிப்ரவரி 10ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத், துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி ஆகியோர் தலைமையிலான குழுவினர் இலங்கை சென்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தர் நினைவுப்பொருட்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க நேற்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இலங்கையில் புத்தரின் தேவ்னிமோரி புனித சின்னங்களின் கண்காட்சியை துவக்கி வைத்ததற்கு இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொழும்புவில் உள்ள புனித கங்காராமை விகாரையில் புனித தேவ்னிமோரி சின்னங்களின் கண்காட்சியை துவக்கி வைத்த இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்தாண்டு நான் இலங்கை சென்றிருந்த போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தேவ்னிமோரி புனித சின்னங்களுக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ளது. இந்தியா, இலங்கை இடையே ஆழமான நாகரிக மற்றும் ஆன்மிக தொடர்பு இருக்கிறது. புத்த பெருமான் வழிகாட்டிய கருணை, அமைதி மற்றும் நல்லிணக்கம் மனித குலத்திற்கு தொடர்ந்து வழிகாட்டட்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.