பிரதமரை தாக்க எதிர்க்கட்சிகள் சதி: சபாநாயகர் குற்றச்சாட்டு
1 min read
Opposition parties plot to attack Prime Minister: Speaker alleges
5.2.2026
லோக்சபாவில் பிரதமர் மோடியை எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கக்கூடும் என எனக்கு தகவல் கிடைத்தது. இதனால், அவரை அவைக்கு வர வேண்டாம் என நான் தான் அறிவுறுத்தினேன்,” என சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.
லோக்சபா காலையில் கூடியதுமே, ‘ஜனாதிபதி உரை மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பேச அனுமதிக்க வேண்டும்’ என வலியுறுத்தி, காங்., எம்.பி.,க்கள் கடும் அமளியில் இறங்கியதால், கேள்வி நேர அலுவல்கள் ரத்து செய்யப்பட்டு, உடனடியாக சபை ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்தடுத்து அவை கூடிய போது எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே அறிவித்தபடி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து, பிரதமர் மோடி பேசுவார் என்ற எதிர்பார்ப்பில், மாலை 5:00 மணிக்கு சபை கூடியது. ஆனால், அதுவும் நடக்காததால், லோக்சபா நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து இருந்தன. பதில் சொல்ல பயந்து பிரதமர் அவைக்கு வரவில்லை என ராகுல் கூறியிருந்தார்.
இந்நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாவது: அவையில் சில எம்பிக்களின் நடவடிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் இருந்தது. சில எம்பிக்களின் நடவடிக்கை கரும்புள்ளியாக இருந்தது. சபாநாயகர் அலுவலகத்தில் சில எம்பிக்கள் தவறான வகையில் நடந்து கொண்டனர். நேற்று பாராளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை நாடு பார்த்தது. பிரதமரின் இருக்கையை நோக்கி எம்பிக்கள் எப்படி சென்றார்கள் என்பதை பார்த்தார்கள். பிரதமரை தாக்கக்கூடும் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருப்பதற்காக பிரதமர் மோடியை லோக்சபாவுக்கு வர வேண்டாம் என நான் தெரிவித்தேன்.
அவையை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவையின் தலைவர் லோக்சபாவில் பேசாதது முறையானது அல்ல. லோக்சபாவுக்கு வராமல் ஒப்புக் கொண்டு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதை பிரதமர் தடுத்துவிட்டார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.