June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

‘பணத்தை வாங்கிக் கொண்டு தி.மு.க.வினர் காதில் விசில் ஊதி அனுப்புங்கள்’ – விஜய் பேச்சு

1 min read

‘Take the money and send it to the DMK to blow the whistle’ – Vijay’s speech

13/2/2026
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க 11 சட்டசபை தொகுதிகளில் இருந்து 5 ஆயிரம் நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

த.வெ.க. நிர்வாகிகள் மத்தியில், பிரசார வேனில் நின்றபடி கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:-

துணிச்சல் தான் எல்லாவற்றுக்கும் ஒரு அடிப்படை என்று சொல்வார்கள். அது ஒரு பவர். அது எங்கிருந்து ஆரம்பிக்கிறது தெரியுமா. நம்மை ஏளனமாக பார்க்கும்போது, எந்த விஷயத்திலும் கிண்டலும் கேலியுமாக பேசும்போது, அதையே நாம் பாசிட்டிவ்வாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஏ.. விஜய் வீட்டை விட்டு வெளியே வா, ஏ.. விஜய் பனையூரை விட்டு வெளியே வா என்று சொல்பவர்களிடம் நான் ஒன்று கேட்கின்றேன். எனது வீடு எங்கிருக்கிறது தெரியுமா, என்னை சீண்டி பார்ப்பவர்களுக்கு சொல்கிறேன். தமிழ்நாடு தான் என் வீடு. எங்கள் வீட்டில் 8 கோடி பேர் உள்ளனர். என் குடும்பம், என் உறவு, என் சொந்தம் அவர்கள்தான். அவர்களுடன் தான் நான் நிற்கப்போகிறேன்.

இந்த விஜய் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை. நீதி கேட்டும் வந்துள்ளேன். நான் என்ன தப்பு செய்தேன். என்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன். அது தவறா? மற்ற கட்சிகள் மாநாடு நடத்த இடம் கொடுக்கிறார்கள். ஆனால், நமக்கு தரமாட்டேன் என்கிறார்கள். தரவும் விடமாட்டார்கள். இது என்ன நியாயம். இது ஸ்டாலின் சார் ஆப்பரேட்டிங் புரொசிஜர்(SOP). நமக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்கள் யார்? உங்களுக்கு தெரியும். அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன்.

செல்பே எடுக்காத கூட்டணி கணக்கும், காசு கொடுத்து ஓட்டு வாங்குவதும் நான் வந்தபிறகு எடுபடாது. ஆயிரம், 2 ஆயிரம், 5 ஆயிரம் என்று கொடுப்பார்கள். அது உங்கள் பணம். பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் காதில் விசிலை ஊதி அனுப்புங்கள். இளம் தலைமுறையினருக்கும் ஒன்று சொல்ல வேண்டும். பணம் கொடுக்கும் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். எல்லோரும் கையை நீட்டுங்கள். உறுதிமொழி ஒன்று எடுத்துக்கொள்வோம். “எங்கள் ஓட்டு எங்கள் உரிமை, எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு. வேறு யாரையும் நம்பி ஏமாறமாட்டோம்.”

நீங்கள் கொள்ளையடித்த பணத்தை குப்பையில்தான் போடவேண்டும். மக்கள் குப்பையில்தான் உங்களை தூக்கிப் போடுவார்கள். மக்களையும், மக்கள் எதிர்காலத்தையும் மனதில் வைத்து அரசியலுக்கு வந்துள்ளேன். பெற்றோரிடம் யாருக்கு ஓட்டு என்று மைக்கை நீட்டி கேட்டால், அதற்கு பின்னால் நின்று விசில் சின்னத்துக்கு என்று சொல்லும்மா என்று குழந்தைகள் பேசும் வீடியோவை நான் பார்த்தேன்.

நான் எந்த கட்சியையும் ஒழிக்க அரசியலுக்கு வரவில்லை. வெறுப்பு அரசியல் செய்யவும் வரவில்லை. தேர்தலில் நின்று ஜெயித்து மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்துள்ளோம். இந்த ஏ டீம், பி டீம் எல்லோரும், என்னை அனுபவம் இல்லாதவர் எப்படி ஆட்சி செய்வார் என்று கேட்கிறார்கள்.

உங்களுக்கு என்ன அனுபவம் உள்ளது? அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில், அடுத்தவர்கள் முகவரியில் நிற்பவர்கள், என்னைப்போல தனியாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்க திராணி உள்ளதா? 75 வருட கட்சி, 50 வருஷ கட்சி எல்லாம் கூட்டணியை நம்பி உள்ளது. கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் 30 சதவீத வாக்கு நமக்கு உள்ளது.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மறந்தவர்கள், அவர்கள் கூறியதை மறந்துவிட்டவர்கள் நம்மை அனுபவம் இல்லை என்கின்றனர். அனுபவம் இல்லைதான். கொள்ளையடிக்க அனுபவம் இல்லை. சுட்டு போட்டாலும் அது வராது. மக்களை நேசிக்கும் மனது இருந்தால் போதும். சூப்பரான நல்லாட்சி கொடுக்க முடியும். செய்து காட்டுவேன்.

4¾ வருடம் கழித்து வீட்டுக்கு வீடு கதவை தட்டி உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கின்றனர். மக்கள் கனவு என்ன தெரியுமா. நான் சொல்லட்டுமா. கடந்த 3 தேர்தல்களில் மக்கள் உங்களுக்கு வாக்களித்தது, நல்லது செய்வீர்கள் என்றுதான். ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு கூட தரமுடியவில்லை. அதனால் மக்கள் விரோத தி.மு.க. அரசு நிலைக்கக்கூடாது என்பதுதான் மக்கள் கனவு. த.வெ.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் மக்கள் கனவு.

தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று முதல்-அமைச்சர் சொல்கிறார். ஆனால் உண்மையில் சட்டம் – ஒழுங்கில் அவுட் ஆப் கண்ட்ரோல், பெண்கள் பாதுகாப்பில் அவுட் ஆப் கண்ட்ரோல், இளைஞர்கள் வேலைவாய்ப்பில் அவுட் ஆப் கண்ட்ரோல், மொத்தத்தில் அவர்கள் ஆட்சியே அவுட் ஆப் கண்ட்ரோல்.

உண்மையிலேயே மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் ஏன் நடக்கிறது? மக்கள் எங்கே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? விலைவாசி உயர்வு, பஸ் வசதி இல்லை, ரோடு சரியில்லை என்று பல பிரச்சினைகள் உள்ளது. இப்படி அடிப்படை பிரச்சினை இருக்கும்போது, இப்போது கனவை சொல்லுங்கள் என்கிறீர்கள்.

ஆட்சிக்கு வரும்போதுதான் பொய் சொன்னீர்கள். போகும்போதும் பொய் செல்கிறீர்களே. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியதை 90, 80, 70 சதவீதம் என்று குறைந்து கொண்டே போகிறது. “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே”, என்று சொல்வார்கள். அதையே கொஞ்சம் மாற்றி சொல்கிறேன். “புளுகும் பெருமானே”.

சட்டம் – ஒழுங்கு சரியாக இருந்தால் ஏன் தவறு நடக்கிறது? டி.ஜி.பி. எங்கே போனார். முதலில் டி.ஜி.பி.யை போடுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களின் அடிப்படையை தீர்ப்பதே முதல் வேலை. அதை தேடிப்போவதே அஜண்டா. தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டு இருக்கிறது. விரைவில் வெளிவரும்.

சும்மா ஆட்சிக்கு வரவேண்டும் என்பதால், நடைமுறைக்கு சாத்தியமில்லாததை வாக்குறுதியாக கொடுக்கமாட்டேன். நான் மீண்டும் சொல்கிறேன். 2 பேருக்கு நடுவில்தான் போட்டி. ஒன்று தி.மு.க., இன்னொன்று த.வெ.க., அதாவது தூய சக்தி த.வெ.க., தீய சக்தி தி.மு.க. இடையேதான்.

இது தமிழக சட்டசபை தேர்தல். யார் பொய் வாக்குறுதியை கொடுப்பது. நாம் யாரை எதிர்க்க வேண்டும். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க.வைத்தான். விஜய்யை நம்புகிறீர்களா, ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா?

குரூப்-2 தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை. உலக நாடுகளுடன் போட்டிபோடுகிறார்களாம். வரப்போவது உங்கள் ஆட்சி, நம்ம ஆட்சி. இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனதில் வைத்து நல்ல தீர்வு காண்போம்.

விக்கிரவாண்டி மாநாட்டில் நான் சொன்னேன். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றேன். எல்லா கூட்டணியிலும் இப்போது அது வெடிக்கிறது. அவர்களுக்கு எல்லாம் ஜெயிக்கத்தான் கூட்டணி. மற்றபடி அவர்கள் தனியாகத்தான் செயல்படுவார்கள். உங்களுடன் நான் இருக்கிறேன். வெற்றி நிச்சயம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *