கடையம்: விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்திற்கு ரூ 10 இலட்சம் நிதி
1 min read
Kadayam: Rs 10 lakh financial assistance to the family of DMK member who died in an accident
14.2.2026
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த திமுக பெண் உறுப்பினர் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார்.
திமுக உறுப்பினர்கள் விபத்தில் மரணமடைந்தால் 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கபடுமென தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
கடையத்தை அடுத்த இராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவரின் மனைவி பார்வதி என்ற உஷா (வயது 41). இவர் திமுக உறுப்பினர் ஆவார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் இரண்டு மகன்களை கூலி வேலை செய்து படிக்க வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 03.11.2025 அன்று நடந்த விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 05.11.2025 அன்று பார்வதி என்ற உஷா மரணமடைந்தார். இவரது குடும்பத்திற்கு திமுக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி 10 இலட்சம் ரூபாயை வழங்கும்படி திமுக மாவட்ட செயலாளர் இரா. ஆவுடையப்பன் தலைமைக்கு பரிந்துரை செய்தார்.
இதன்படி திமுக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி
விபத்தில் இறந்த பார்வதி என்ற உஷாவின் மகன்களான கார்த்திக் ராஜா (வயது 21), பர்வேஷ் (வயது 16) ஆகியோருக்கு 13-02-2025 அன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி நிதியுதவி செய்தார்.
நிதியுதவியை பெற்றுக் கொண்ட கார்த்திக் ராஜா மற்றும் பர்வேஷ் ஆகியோர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும், பரிந்துரை செய்த திமுக மாவட்ட செயலாளர் இரா. ஆவுடையப்பனுக்கும், முன்னெடுத்த மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ. ஜெயக்குமாருக்கும் மற்றும் திமுகவினருக்கும் நன்றி தெரிவித்தனர்.