June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பூரில் பதுங்கியிருந்த வங்காளதேசத்தினர் 6 பேர் கைது

1 min read

6 Bangladeshis arrested for hiding in Tiruppur

21.2.2026

சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வந்ததை டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் கண்டறிந்தனர்.

அந்த நபர்கள் யாரென்று ஆய்வு செய்த போது திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களை மடக்கி பிடிக்க டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் திருப்பூர் வந்தனர். பின்னர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் 2 நாட்களாக முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இன்று அதிகாலை ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2பேர், பல்லடத்தில் 3பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் 6 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்த மிஜனூர் ரஹ்மான் (33), முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஜாஹித், முகமது உஜ்ஜால் (29) என்பது தெரியவந்தது. தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூருக்கு வந்த அவர்கள் பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.

அவர்கள் எதற்காக திருப்பூர் வந்தனர், சதி திட்டங்களை தீட்டுவதற்காக வந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று 6 பேரிடமும் டெல்லி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு டெல்லி அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தொழிலாளர்கள் போர்வையில் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருப்பூருக்கு வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

திருப்பூர் போலீசார் தொடர்ந்து அதிரடி ஆய்வு நடத்தி போலி ஆவணங்களுடன் தங்கியிருக்கும் வங்காளதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் 6பேர் திருப்பூரில் தங்கியிருந்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே முறைகேடாக தங்கியிருக்கும் வங்காளதேச தொழிலாளர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *