பஹல்காம் சம்பவத்தை கண்டித்து போராடாதது ஏன்? திமுக கூட்டணிக்கு அண்ணாமலை கேள்வி
1 min read
Why didn’t they protest against the Pahalgam incident? Annamalai questions DMK alliance
3.2.2026
ஈரான் ஆட்சியாளர் கமேனி கொலையைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய திமுக கூட்டணி கட்சியினர், பஹல்காமில் இந்தியர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து போராடாதது ஏன் என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அணுஆயுத ஒப்பந்தத்திற்கு பிடி கொடுக்காத ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் ஆட்சியாளர் கமேனி உள்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். கமேனி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு நாடுகளில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்தது.
அந்த வகையில், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முஸ்லிம் அமைப்புகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. இதில் விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்று, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இது குறித்து பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால், பஹல்காமில் நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டபோது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளோ கண்டனம் தெரிவித்து வீதியில் இறங்கி போராடவில்லை.
ஆனால்,நேற்று சென்னையில் முழு போலீஸ் பாதுகாப்புடன் ஒரு போராட்டம் அரங்கேறியது. தங்களின் உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்கள், நர்சுகள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு இதுபோன்ற பாதுகாப்பு சலுகை வழங்கப்படுவதில்லை. மாறாக, போராட்டக்குரல் எழுப்பினாலே கைது செய்யப்படுகிறார்கள்.
தி.மு.கவைப் பொறுத்தவரையில் கூட்டணி கட்சியினரை எப்போதும் திருப்திபடுத்துதலே அவர்களின் முக்கிய நோக்கமாகும்,
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.