முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பா.ஜ.க.வில் இணைந்தார்
1 min read
Former tennis player Leander Paes joins BJP
31.3.2026
மேற்கு வங்காளத்தில் மே 7-ந்தேதியுடன் சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மே மாதம் 7-ந்தேதியுடன் அரசின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, 294 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பிரபல முன்னாள் டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் பா.ஜ.க.வில் நேற்று இணைந்துள்ளார். மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்துள்ளார். அவரை வரவேற்ற ரிஜிஜு, பா.ஜ.க. தளத்தில் நீங்கள் பெரியதொரு இன்னிங்சை விளையாடுவீர்கள் என நான் முன்கூட்டியே கணித்து பார்க்கிறேன்.
கேலோ இந்தியா இயக்கம் இன்னும் கூடுதல் பலனடைவதற்கான பணிகளை பா.ஜ.க.வில் இணைந்ததன் மூலம் நீங்கள் உறுதி செய்வீர்கள் என்றும் கூறினார். மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அவர் கட்சியில் சேர்க்கப்பட்டு உள்ளது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அவர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது பின்னர் தெரிய வரும். கட்சியில் சேர்ந்த பின்னர், பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோருக்கு லியாண்டர் பயஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.