ஆவுடையானூர் பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
1 min read
Election awareness rally at Avudaiyanur School
11.4.2026
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால் தொடங்கி வைத்தார்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியின் நிர்வாகி அருட்திரு அந்தோனி அ. குரூஸ் தலைமை வகித்தார். தேர்தல் விழிப்புணர்வு வட்டாட்சியர் சத்தியவள்ளி, வருவாய் ஆய்வாளர் முத்துராஜ், தனி வருவாய் ஆய்வாளர் கின்சிலின்ராம், கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி அருள் பிரதீப் வரவேற்று பேசினார்.
தென்காசி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார் ஆட்சியருமான வைஷ்ணவி பால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளியின் என்சிசி, என்எஸ்எஸ், ஜே ஆர் சி, ஸ்கவுட் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட இப்பேரணியில் சுமார் 400 மாணவ மாணவியர்கள் பங்கேற்று ஆவுடையானூரின் முக்கிய வீதிகளில் பேரணியாக வலம் வந்து விழிப்புணர்வு செய்தனர்.
பேரணியில் 100 சதவீத வாக்களிப்பு பதாகைகள், மேளதாளம், சிலம்பாட்ட நிகழ்ச்சி, விழிப்புணர்வு பாடல், உற்சாக கோஷங்கள் உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகளால் பேரணி களைகட்டியது.
இதில் முன்னாள் தலைமை ஆசிரியர் அருள் செல்வராஜ், பாவூர்சத்திரம் தொழிலதிபர் சேவியர்ராஜன், முன்னாள் மாணவர் கோவா சுரேஷ், ராஜாஸ் குழும தொழிலதிபர் ஆரோக்கியராஜ், காவல்துறையினர்,; மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.