தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை
1 min read
Paid holiday for workers on election day
11.4.2026
தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தகவல்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவம் சட்டத்தின்படியும். தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படியும், 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்ய ஏதுவாக, தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் நாளான 23.04.2026 அன்று தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் தமது வாக்குரிமையை செலுத்த ஏதுவாக தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
அதனடிப்படையில், தென்காசி மாவட்டத்தில் இயங்கும் தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தற்காலிக தினக்கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் தேர்தல் தினத்தன்று அவர்தம் வாக்குரிமையை செலுத்த சம்பளத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறையை அளிக்க வேண்டும். மேலும் தேர்தல் நாளன்று வாக்களிப்பது அவசியம் என்பதையும் நிறுவன உரிமையாளர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மேலும், மேற்கு வங்கம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் நாளான 23.04.2026 மற்றும் 29.04.2026 ஆகிய தினங்களில் தென்காசி மாவட்டத்தில் மேற்கு வங்க தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய தொழில் நிறுவனங்கள் மேற்படி வாக்குப்பதிவு நடைபெறும் தினங்களில் தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு பொது விடுமுறை அளிக்காத நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது தொழிலாளர் துறையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களான 0462-2555014 94422 29502 72009 58244 மற்றும் 97896 45475 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.