மருத்துவ விடுப்பில் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம்-பரபரப்பு
1 min read
DGP Davidson on medical leave – Controversy
12.4.2026
மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் முன்னாள் இயக்குநருமான டேவிட்சன் தேவாசீர்வாதம் உடல்நலக் குறைவு காரணமாக 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநராகவும், கூடுதலாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆயுதப்படை டி.ஜி.பி-யாகவும் மார்ச் 2-ம் தேதி முதல் டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியாற்றி வந்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இவர் இந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏப்ரல் 9-ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 30 தேதி வரை மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.
டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டி.ஜி.பி) எழுதியுள்ள கடிதத்தில் ’ஏற்கனவே இதயக் கோளாறு காரணமாக ஆஞ்ஜியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது உயர் ரத்த அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். சமீபத்தில் ஏற்பட்ட உடல் நல அசௌகரியத்தால் மருத்துவர்கள் முழு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக ஏப்ரல் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை மொத்தம் 22 நாட்களுக்கு அவர் மருத்துவ விடுப்பில் செல்ல அனுமதிக்க வேண்டும்’ என கடிதம் எழுதி உள்ளார். இதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் அவர் இணைத்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.