நெல்லை ரெயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
1 min read
Crowd of passengers at Nellai railway station
26.4.2026
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. சென்னை மற்றும் பிற நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களில் சென்று வாக்களிப்பதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.இந்த நிலையில், வாக்களிக்க வெளியூருக்கு சென்றவர்கள் நேற்று முதல் மீண்டும் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பஸ்கள் மற்றும் ரெயில்கள் பயணிகளால் நிரம்பி வழிந்தன.
திருச்சி, மதுரை, சேலம், கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகள் திரளாகக் காணப்பட்டனர். இன்று முதல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், அவற்றிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டிருந்தாலும் அங்கும் கூட்டம் குறையவில்லை.
அரசு பஸ்கள் மற்றும் ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ்களை நாடினர். இதனால் ஆம்னி பஸ்களிலும் அதிக நெரிசல் ஏற்பட்டது.திருச்சி பஸ் நிலையத்திலிருந்து சென்னை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. நெல்லை மற்றும் மதுரை ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.