அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
1 min read
Applications for admission to government arts colleges can be made from tomorrow!
6.5.2026
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2026-27ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. பதிவோடு சேர்த்து விண்ணப்பட்ட கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்றும், பதிவு கட்டணம் மட்டும் ரூ.2 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 07.05.2026 முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2026-2027 ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 150 பாடப்பிரிவுகளில் 126950 சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணாக்கர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பான விவரங்களை www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை 044-24343100 / 24342011 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப மற்றும் பதிவுக் கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.