சேரன்மகாதேவி லஞ்சம் வாங்கிய பெண் விஏஒ உள்பட இருவர் கைது
1 min read
Two people, including a female VAO, arrested for accepting bribe from Cheran Mahadevi
4.6.2026
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி பகுதியில் பைனான்ஸ் லைசன்ஸ் புதுப்பிக்க ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் புரோக்கர் உள்ளிட்ட இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பாரதிதாசன் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் மூக்காண்டி (வயது 46), பைனான்ஸ் ஆபீஸ் வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவர் தனது பைனான்ஸ் நிறுவன லைசென்ஸை புதுப்பிக்க ஆன்லைனில் விண்ணப்பித் துள்ளார். இவரது லைசென்ஸை புதுப்பிக்க அனுமதி அளிப்பதற்கு சேரன்மகாதேவி கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனி ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மூக்காண்டி இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நெல்லை லஞ்ச ஒழிப்பு துறை ஏடி.எஸ்.பி எஸ்கால் தலைமையிலான போலீசார் நேற்று காலை விஏஒ இதயக்கனியை கையும், களவுமாக பிடிக்க ரசாயனம் தடவிய பணத்தை மூக்காண்டியிடம் கொடுத்து அனுப்பினர்.
தொடர்ந்து மறைந்து இருந்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்துள்ளனர். அப்போது சேரன்மகாதேவி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து, விஏஒ இதயக்கனி மூக்காண்டியிடம் ரூ.10 ஆயிரம் பணத்தை பெறும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவருக்கு உதவியாக இருந்த சேரன்மகாதேவியைச் சேர்ந்த புரோக்கர் வெங்கடேஷ் (வயது 38) என்பவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.