அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஜெயக்குமார் புறக்கணிப்பு
1 min read
AIADMK District Secretaries Meeting: Jayakumar boycotts
19/5/2026
அ.தி.மு.க.வில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்றது.
ஆனால் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் மொத்தம் உள்ள 82 மாவட்ட செயலாளர்களில் இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எத்தனை பேர் கலந்து கொண்டுள்ளனர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு 50-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்க ஆதரவு இருப்பதாக அவர்கள் தரப்பில் ஏற்கனவே தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு மாவட்ட செயலாளர்கள் யாரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
சென்னையை சேர்ந்த மாவட்ட செயலாளர்களில் முதன்மையானவராக கருதப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எடப்பாடி பழனிசாமி கூட்டி உள்ள இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கும் இதுவரை ஆதரவு தெரிவிக்காத நிலையில் யாருடைய பக்கம் சாய்வது என்கிற குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.