எடப்பாடி பழனிசாமியால்தான் அதிமுக தோல்வி: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
1 min read
AIADMK’s defeat is due to Edappadi Palaniswami: C.V. Shanmugam alleges
19.5.2026
அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்து வருகிறது. அதிமுகவின் வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்து வருகிறது. தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டும். நீக்கப்பட்டவர்களை இணைத்து அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம். அதிமுக இணைப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்தார். வலிமையான கூட்டணி அமைக்கப்படாததால் தோல்வி அடைந்துள்ளோம்.
சட்டசபை தேர்தலில் தவெகவுடன் கூட்டணி வைக்க நாங்கள் வலியுறுத்தினோம். கூட்டணி பேசவந்த தவெக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி உதாசினப்படுத்தினார். டாக்டர் கிருஷ்ணசாமியையும் கூட்டணியில் சேர்க்க எடப்பாடி மறுத்தார். கூட்டணி அமையக்கூடாது என வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார். தேமுதிகவை ஏளனம் செய்தார்; அது அரை சதவீத கட்சி என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முன்பே கட்சியினரை அரவணைத்திருந்தால் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம்; எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆகியிருக்கலாம். அதிமுகவில் இணைய வந்த ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினராக கூட எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. கட்சியினரை அன்பாக பேசி எடப்பாடி பழனிசாமி அரவணைத்து செல்வதில்லை.
ஒருபுறம் பேசலாம் என கூறிவிட்டு மறுபுறம் நிர்வாகிகளை நீக்குகிறார் எடப்பாடி பழனிசாமி. பதவி பறிக்கப்படும் என நிர்வாகிகள் மிரட்டப்படுகின்றனர்; அச்சுறுத்தப்படுகின்றனர். இதுவரை 31 மாவட்ட செயலாளர்கள் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயார்; பொதுக்குழுவுக்கு அழையுங்கள்; பொதுக்குழுவை கூட்டுங்கள், விவாதிப்போம்; அதில் முடிவெடுக்கலாம். பொதுக்குழுவில் என்ன முடிவு எடுத்தாலும் தலைவணங்கி ஏற்போம்.
தனது பதவிக்கு ஆபத்து வரும் என்பதால் அனைவரையும் ஒன்றினைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். தனிப்பட்ட விமர்சனத்தை முன்வைப்பது எடப்பாடியின் தலைமை பதவிக்கு அழகா?. தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.