நெருக்கடியை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி நிதி
1 min read
Rs 10,000 crore fund for oil companies to overcome the crisis
4.6.2026
மத்திய கிழக்கு மோதலால் எண்ணெய் வரத்து குறைந்துள்ள நிலையில் விமான எரிபொருள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்திய விமான நிறுவனங்கள் தங்களின் சர்வதேச விமானச் சேவைகளைக் குறைக்கப் போவதாகவும், பயணக் கட்டணங்களை கணிசமாக உயர்த்தப் போவதாகவும் அண்மையில் அறிவித்திருந்தன.
விமானக் கட்டணங்கள் மேலும் உயராமல் தடுக்கவும், விமானத் துறையை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கவும்
விமான எரிபொருள் விலையை நிலைப்படுத்துவதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவியாக வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த வட்டியற்ற நிதியுதவியானது எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களுக்கு பெரும் பக்கபலமாக அமையும்.
இதன் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இயக்கப்படும் இந்திய விமான நிறுவனங்களுக்கு, விமான எரிபொருள் விலையை உயர்த்தாமல் ஒரே சீரான விலையில் வழங்க எண்ணெய் நிறுவனங்களால் முடியும்.
நேற்று அமைச்சரவை கூட்டத்தின் பின் இந்த முடிவை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 2025ஆம் ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து மூடியது.
இதனால் இந்திய விமானங்கள் மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டியிருந்ததாலும், தற்போது மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலினாலும் சர்வதேச அளவில் விமான எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் விண்ணைத் தொட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், மத்திய அரசின் இந்த ரூ.10,000 கோடி நிதியுதவி இந்திய விமான போக்குவரத்துத் துறைக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.