சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
1 min read
Chief Minister Vijay launched the ‘Singappenn’ Special Task Force scheme
9.6.2026
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெற்ற விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ லோகோவை வெளியிட்டதுடன், புதிய ரோந்து வாகனங்களையும் அறிமுகப்படுத்தினார். பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி கவனம் பெற்றுள்ளது.
இந்த விழாவுக்கு முன்னதாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். அவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டமுதலமைச்சர் விஜய், சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த காட்சியை உற்சாகமாக வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான செய்திகள் வெளியாகும் போதெல்லாம் மனவேதனை ஏற்படுவதாக கூறினார். பெண்களின் பாதுகாப்பு விவகாரத்தில் எந்த வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் வலியுறுத்தினார். மேலும், பல குற்றச்சம்பவங்களுக்கு போதைப்பொருள் முக்கிய காரணமாக இருப்பதாகவும், நீண்ட காலமாக அதனை கட்டுப்படுத்த தவறியதே பிரச்சினைகளை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
விழாவின் ஒரு பகுதியாக பேண்ட் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது ‘பிகில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சிங்கப்பெண்ணே’ மற்றும் ‘ஆளப்போறான் தமிழன்’ உள்ளிட்ட பாடல்களின் இசைத் துணுக்குகளை பேண்ட் குழுவினர் வாசித்தனர். அதை கைத்தட்டி ரசித்த விஜயின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.