செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த மத்திய அரசு
1 min read
Central Government imposes new regulations on fertility treatment centers.
10/6/2026
இந்தியாவில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐ.வி.எப். (IVF) மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தேசிய ஆர்ட் மற்றும் வாடகைத்தாய் பதிவகத்தின் தரவுகளின்படி, 7,803 மையங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளன. அவற்றில் 4,268 மையங்களுக்கு மட்டுமே இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக உரிமம் பெறாத போலி மையங்கள் மற்றும் கருவுறுப்பு மாற்ற முறைகேடுகள் குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. எனவே, இந்த செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையங்களை முறைப்படுத்த மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, இந்த மையங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஐ.வி.எப். மற்றும் உதவி இனப்பெருக்க சிகிச்சை மையங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய ஆய்வகப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, அரசு அங்கீகாரம் பெற்ற பதிவு செய்யப்பட்ட மையங்களுக்கு மட்டுமே விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் மூலம் போலி மற்றும் உரிமம் இல்லாத கருத்தரிப்பு மையங்களுக்கு இனி மருத்துவப்பொருட்கள் கிடைப்பது முற்றிலும் முடக்கப்படும். அதோடு, மருத்துவப்பொருட்களைத் தயாரிப்பவர்களும், வினியோகம் செய்பவர்களும் தாங்கள் பொருட்களை அனுப்பும் கருத்தரிப்பு மையம் அரசிடம் முறையாகப் பதிவு பெற்றுள்ளதா என்பதை சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, செயற்கை கருத்தரிப்புக்கு தேவைப்படும் விந்தணு, முட்டை மற்றும் கருவை வளர்க்கப் பயன்படுத்தப்படும் சிறப்பு ரசாயனங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இனி அங்கீகாரம் இல்லாத மையங்களுக்கு கிடைக்காது. தற்போதைய புதிய கட்டுப்பாட்டின் மூலம், போலி மையங்கள் தேவையான மருத்துவப் பொருட்களை வாங்க முடியாமல் முடங்கும் நிலை ஏற்படும். இதனால் தம்பதியர் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்.