தோரணமலையில் உணவருந்தும் அறை அமைக்க பயன்பட்ட முருகன் சன்னதி மேற்கூரை
1 min read
The roof of the Murugan shrine at Thoranamalai, which was used to set up a dining area.
13.7.2026
தென்காசி – கடையம் செல்லும் சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோவிலில் மலை உச்சியில் பயன்பெற்று வந்து 50 ஆண்டு பழமையான இரும்பு பொருட்களால் உருவான மேற்கூரையினை வைத்து பக்தர்கள் உணவருந்தும் அறை அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், தென்காசி-கடையம் சாலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் அமைந்துள்ளது. மூலிகை மருத்துவத்திற்கு பெயர் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில் மலை உச்சியில் முருக பெருமான் இயற்கையாக அமைந்துள்ள குகைக்குள் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். இம்முருகனை தரிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக அங்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் இணைந்து இரும்பு பொருட்களால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது மலை உச்சியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அந்த மேற்கூரை அகற்றப்பட்டது. இந்நிலையில் அங்கிருந்து அகற்றப்பட்ட இந்த மேற்கூரை பொருட்களை மலை உச்சியில் இருந்து கீழே பத்திரமாக எடுத்து வந்து, அடிவாரத்தில் பக்தர்கள் அமர்ந்து உணவு உண்பதற்காக உணவருந்தும் அறையானது அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இக்கோவிலில் தினந்தோறும் மதியமும், ஞாயிற்றுக்கிழமைகள், தமிழ் மாத கடைசி வெள்ளி மற்றும் பௌர்ணமி கிரிவல தினத்தன்று காலையும், மதியமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அவர்கள் வசதியாக அமர்ந்து உணவு அருந்தும் அறை அமைக்கப்பட்டிருப்பதும், அதுவும் சுமார் 50 ஆண்டு காலம் மலை உச்சியில் முருக பெருமானை தரிசிக்க வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியாக அமர்ந்து முருகனை தரிசிக்க, நிழல் தந்து உதவிய பொருட்களை வீணாக்காமல், அப்பொருட்களால் இந்த அறை அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கோவில் நிர்வாகத்திற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். இதனிடையே இப்பணியில் சிறப்பாக ஈடுபட்ட கோவில் பணியாளர்களை கோவில் பரம்பரை அறங்காலவர் ஆ.செண்பகராமன் பாராட்டி கௌரவித்தார்.