டிரைவருடன் கள்ளக்காதல்; பாம்பை கடிக்க வைத்து கணவரை கொன்ற பெண்
1 min read
Illicit affair with driver; woman kills husband by having a snake bite him.
18.7.2026
கள்ளக்காதல் விவகாரத்தில் பாலில் தூக்க மாத்திரை கலந்து, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் வசித்து வந்தவர் அதுல் பன்வார். இவருடைய மனைவி தாமினி. 2019-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஹஸ்தினாப்பூரில், மனைவியுடன் சேர்ந்து கிருஷ்ணா என்ற பெயரில் பிளே ஸ்கூல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்த பள்ளியில் வாகன ஓட்டுநராக இருப்பவர் துஷார் என்ற நிக்கி. இவருடன் தாமினிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதற்கு தடையாக இருந்த அதுலை தீர்த்து கட்டி விட முடிவு செய்தனர். இருவரும் சேர்ந்து சாலை விபத்தில் அதுலை கொலை செய்ய முதலில் திட்டமிட்டனர்.
ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. இதனால், வேறு திட்டம் தீட்டி கணவரை கொல்ல தாமினி முடிவு செய்துள்ளார். இந்த முறை கணவருக்கு, பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில், அவர் மயக்கமடைந்ததும், படுக்கையறையில் விஷப்பாம்பை விட்டு அவரை கடிக்க வைத்து கொன்றுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் சூப்பிரெண்டு அபிஜித் குமார் கூறும்போது, அதுலை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், அவர் அதில் பலனின்றி பலியாகி விட்டார்.
இந்த கொலைக்கு 2 காரணங்கள் இருந்துள்ளன. காப்பீடாக ரூ.20 லட்சம் தொகையை பெற்று விட்டு, கள்ளத்தொடர்பை தொடர இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். சந்தேகம் வராமல் இருக்க பாம்பை விட்டு கடிக்க செய்து இயற்கையான முறையில் உயிரிழந்தது போல் காட்ட திட்டமிட்டு உள்ளனர்.
இது இயற்கை மரணம் போன்று முதலில் விசாரிக்கப்பட்டாலும், போலீசாரின் தீவிர விசாரணையின் முடிவில் இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.