பழனி கோவில் நில மோசடி வழக்கு; கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் மரணம்
1 min read
Palani temple land fraud case: Arrested lawyer Anwarudeen dies in prison.
8.8.2026
பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில், தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்த புகாரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர விசாரணை நடத்தும் பணியில் இறங்கினர்.
சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளையை சேர்ந்த முருகதாஸ், திருப்பூர் மாவட்டம், உடுமலை பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழநி சேதுபதி, கோவில் நிர்வாக அதிகாரிகள், வருவாய் துறையினர், பதிவுத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் வெள்ளத்துரை, அன்வர்தீன், முருகதாஸ், சேதுபதி ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
கைதான வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு மதுரை மத்திய சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.