24 மணிநேரத்தில் 5 படுகொலைகள்: நடவடிக்கை தேவை- அன்புமணி
1 min read
5 Murders in 24 Hours: Action Needed – Anbumani
17.8.2026
தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் வணிகம், அதன் விளைவாக நிகழும் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுத்து சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் கோவில் திருவிழாவில் மது போதையால் ஏற்பட்ட மோதல் காரணமாக சந்துரு, விக்கி (எ) நீலகண்டன் என்ற இரு இளைஞர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் 25 வயது இளைஞர் கழுத்தை அறுத்து படுகொலை, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நரேஷ்குமார் என்ற இளைஞர் வெட்டிக்கொலை, சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் ராதா என்ற பெண் நகைக்காக கொலை என கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 10 நாள்களில் 8 கொலைகள், கோவை மாவட்டத்தில் 11 நாள்களில் 4 படுகொலைகள் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான கொலைகளின் பின்னணி போதைப்பொருள் புழக்கம் மற்றும் பயன்பாடு என்பதாகத் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருள்களின் புழக்கத்தை வேகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசரத் தேவை ஏற்பட்டிருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருள்களின் வணிகமும், பயன்பாடும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தன. அதனால் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்ததால் தான் கடந்த ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். புதிய ஆட்சியிலும் இதே நிலை தொடருவது சரியல்ல.
எனவே, தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் வணிகம், அதன் விளைவாக நிகழும் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுத்து சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.