மீட்கப்பட்ட சிலை: முதல்வர் விஜய் நேரில் பார்வை
1 min read
Statue: Chief Minister Vijay
18/8/2026
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில், 1957 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில், திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை, காளிங்க நர்த்தனர் கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி லோகச் சிலை ஆகியவை திருடு போயின. இது குறித்து, கடந்த 2020ம் ஆண்டு கோவில் செயல் அலுவலர் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை, பிரிட்டன் நாட்டின் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. சிலையை, அருங்காட்சியகம் 1967ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபரிடம் வாங்கியுள்ளது.
சிலை திருட்டு தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள், திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை தொடர்பான ஆதாரங்களை சேகரித்து, பிரிட்டன் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அவற்றின் அடிப்படையில், திருமங்கை ஆழ்வார் சிலையை, மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் அரசு முன்வந்தது.
பின்னர் துாதரக நடவடிக்கை வழியே, ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் இருந்த, திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. தலைமைச் செயலகத்தில் இருந்து மீட்கப்பட்ட, திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை, முதல்வர் விஜயிடம், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் உள்ளிட்டோர் காண்பித்தனர்.
அப்போது, சிலையை பார்வையிட்ட முதல்வர் விஜய், சிலை திருட்டு தடுப்பு பிரிவினருக்கு, பாராட்டு தெரிவித்தார்.