September 1, 2026

Seithi Saral

Tamil News Channel

புத்தகம் கொண்டு வரவில்லை: சிறுமியை வெயிலில் நிற்க வைத்ததால் உயிரிழந்தார்

1 min read

Girl dies after being made to stand in the sun for not bringing a book.

1/9/2026
பள்ளிக்கு புத்தகம் கொண்டு வராததற்காக 10 வயது மாணவி ஒருவரை ஆசிரியர் வெயிலில் நிற்க வைத்ததால், அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கிழக்கு வினோத் நகர் பகுதியில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி, வகுப்பிற்கு புத்தகம் கொண்டு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வகுப்பாசிரியர், அந்த சிறுமியை வகுப்பிற்கு வெளியே வெயிலில் கைகளை தூக்கியபடி நிற்க வைத்து கடுமையான தண்டனை கொடுத்துள்ளார். நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் உடல்நிலை கடுமையாக மோசமடைந்த அந்த சிறுமி, திடீரென தலைசுற்றி மயங்கி கீழே விழுந்தார்.

சிறுமி மயங்கி விழுந்ததை அடுத்து, பதறியடித்த பள்ளி நிர்வாகத்தினர் அவரது தாயார் அஞ்சலிக்கு அவசரமாக தகவல் கொடுத்தனர். தாய் பள்ளிக்கு ஓடி வந்து பார்த்தபோது, வெயிலில் வாடி வதங்கிய நிலையில் தனது மகள் ஆபத்தான நிலையில் கிடப்பதை கண்டு கதறி அழுதார். உடனே சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தங்கள் மகளின் மரணத்திற்கு காரணமான அந்த ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும், உள்ளூர் பொதுமக்களும் திரண்டு பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் குதித்தனர். நிலைமை பதற்றமானதை அடுத்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து நியாயமான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அலட்சியம் இருப்பது உறுதியானால் சம்மந்தப்பட்டவர் மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமிக்கு ஏற்கனவே வலிப்பு நோய் பாதிப்பு இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் பள்ளி மற்றும் மருத்துவ பதிவுகள் தரப்பில் கூறப்பட்டாலும், உடற்கூராய்வு முடிவு வந்த பிறகே சிறுமியின் மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *