நைஜீரியாவில் கச்சா எண்ணெயை திருட முயன்ற 37 பேர் விஷவாயு தாக்கி பலி
1 min read
37 killed in gas attack while trying to steal crude oil in Nigeria
5/9/2026
தெற்கு நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள ஒக்கிரிகா பகுதியில், கச்சா எண்ணெய் குழாயில் இருந்து வெளியேறிய கடுமையான விஷவாயுவைச் சுவாசித்ததில் 37 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சட்டவிரோதமாக எரிபொருளைத் திருட முயன்றபோது இந்த சோக விபத்து நடந்துள்ளது.
சர்வதேச நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் நைஜீரியா நாட்டின் டெல்டா பகுதிகளில் கச்சா எண்ணெய் குழாய்கள் அமைத்துள்ளன. மேலும், தெற்கு நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள ஒக்கிரிகா பகுதியின் ஒகாரி ஜெட்டி அருகே பிரதான கச்சா எண்ணெய் குழாய் ஒன்று அமைந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து மக்கள் வறுமையில் வாடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் இளைஞர்கள் மற்றும் கிராமவாசிகள் படகுகளில் வந்து கச்சா எண்ணெய்யைத் திருட முயன்றுள்ளனர். இதற்காக அவர்கள் குழாயில் சட்டவிரோதமாக துளையிட்டபோது, மிக அதிக அழுத்தத்துடன் கச்சா எண்ணெய் மற்றும் கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்த விஷவாயு காற்றில் பரவியது.
அந்த நச்சுப் புகையை சுவாசித்த பலரும் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் தப்பிக்க முயன்றபோது, பலர் அருகில் இருந்த போனி ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர். நைஜீரியாவின் சுற்றுச்சூழல் அமைப்பான “யூத்ஸ் அண்ட் என்விரான்மென்டல் அட்வொகேசி சென்டர்” வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவலின்படி 37 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பலருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நைஜீரிய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.