தென்காசியில் சட்டவிரோத வெடி பொருட்கள் தயார் செய்தபோது விபத்து
1 min read
Accident while preparing illegal explosives in Tenkasi
5.9.2026
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் தயார் செய்த போது ஏற்பட்ட விபத்தில் ஒரு வீடு தரைமட்டமானது. அருகில் உள்ள பல வீடுகள் சேதம் அடைந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி நகராட்சி ஆசாத் நகர் பகுதியில் சுடலை என்பவர் அதே பகுதியில் உள்ள கணவரை இழந்த தங்கம் மற்றும் அவரது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
சுடலை அதே வீட்டில் வைத்து எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக வெடிகளை தயார் செய்து கோவில் விழாக்களில் வான வேடிக்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது வீட்டில் நேற்று மதியம் 1 மணி அளவில் வெடிகள் தயார் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் திடீரென வெடித்து சிதறியது.
இதில் அந்த வீடு தரைமட்டமானதுடன் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள கதவுகள் ஜன்னல்கள் பல்வேறு பொருட்கள் உடைந்து சிதறியது. இந்தத் திடீர் விபத்தில் வீட்டில் இருந்த குழந்தைகள் சவுந்தர்யா (வயது 13) கிருத்திகா(வயது 7) இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து ஏற்பட்ட போது சுடலை மற்றும் தங்கம் வீட்டின் வெளிப்பகுதியில் நின்றதால் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து விரைந்து வந்த குற்றாலம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் காயமடைந்த குழந்தைகளை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அதில் கிருத்திகாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் அப்பகுதியில் சிதறி கிடக்கும் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த விபத்தின் போது அந்த வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் டித்துள்ளது. இதனால் சிலிண்டர் வெடித்ததால் வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது வெடி வெடித்ததால் சிலிண்டர் வெடித்ததா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோக்குமார் மற்றும் போலீசார் ஆசாத் நகர் பகுதிக்கு விரைந்து வந்து வெடி விபத்து ஏற்பட்ட வீட்டையும் அருகில் பாதிப்புகள் ஏற்பட்ட வீடுகளையுயும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக நொடி தயாரித்த சுடலை என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தத் திடீர் வெடி விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.