April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

தூக்கமின்மைக்கு தீர்வு

1 min read

பலருக்கு இரவில் சரியான தூக்கமே இருப்பதில்லை. தூங்குவது என்றால் சும்மா படுக்கையில் வெறுமே நீண்ட நேரம் படுத்துப் புரண்டு கொண்டிருப்பது அல்ல. அடித்துப் போட்டாற்போல சுற்றுப்புறத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் பொருட்படுத்த முடியாத அளவுக்கு ஆழ்ந்த அமைதியான தூக்கத்தை அனுபவிக்க வேண்டும். அது தான் தரமான தூக்கமெனக் கருதப்படுகிறது.

இப்படியான தூக்கம் பலருக்கும் வாய்ப்பதில்லை. இரவுகளில், சும்மா படுக்கையில் விழுந்து புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் நடு நடுவே பாத்ரூமுக்கு வேறு சென்று வந்து கொண்டிருப்பார்கள். சிலர் தலைமாட்டில் தண்ணீர் பாட்டில் வைத்துக் கொண்டு இரண்டு மூன்று முறை எழுந்து அதை அருந்திக் கொண்டும் பிறகு பாத்ரூம் சென்று வந்து கொண்டும் இருப்பார்கள். இது சரியான தூக்கமல்ல. மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இரவில் நடுவில் எந்த இடையூறுகளும் இன்றி சுமார் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். அது தான் ஆரோக்யமான தரமான தூக்கம் என்கிறார்கள்.

சரியான தூக்கம் அமையாமல் போக முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் Chiropractors என்று சொல்லப்படக்கூடிய மருத்துவ நிபுணர்கள். இவர்கள் உண்மையில் மருத்துவ டாகடர்கள் அல்ல. ஆனால் முதுகுத் தண்டுவடப்பகுதிகளை கைகளால் அழுத்தியும் மென்மையாகத் தடவியும் இவர்களால் தண்டுவடப் பிரச்னைகளைச் சரி செய்ய முடியும் என்கிறார்கள். இவர்களை ஏன் டாக்டர்கள் இல்லையென்று சொல்கிறோம் என்றால் இவர்கள் எம் பி பி எஸ் பட்டம் பெறத்தேவையில்லை என்று சொல்லப்படுகிறது.

அதற்காக இந்த வகை சிகிச்சைமுறைக்கு அறிவியல் அடிப்படையே இல்லை என்றும் சொல்ல முடியாது. ஏனெனில், சில வகையான லோயர் பேக் பெயின் (முதுகு வலிகளுக்கு) Chiropractors அளிக்கும் spinal manipulation therapy பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

எனவே சரியான தூக்கமின்மைக்கு இவர்கள் அளிக்கும் நிவாரணமுறைகளையும் முற்றிலும் தவிர்த்து விட முடியாது.

ஆக, நீங்கள் சரியாகத் தூங்கவில்லை என்றால், மனச்சோர்வு, உயர் ரத்த அழுத்தம், அதிக மன அழுத்தம் மற்றும் எடை அதிகரிப்பு உள்ளிட்ட அபாயங்களை எதிர்கொள்ளவிருக்கிறீர்கள் என்று இவர்கள் சொல்வதையும் நாம் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்.

சரி, இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் என்ன தான் தீர்வு?

இனிமேல் இரவுகளில் தூங்கும் போது வலது பக்கமாகச் சாய்ந்து படுத்து தூங்குவதை தவிருங்கள். இடது பக்கமாகவே எப்போதும் தூக்கத்தில் ஆழ முயற்சி செய்யுங்கள். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

நெஞ்சு எரிச்சலில் இருந்து நிவாரணம்

உங்களுக்கு வயிற்றுக்கோளாறுகள் இருந்து, தொடர்ந்து நெஞ்சு எரிச்சல் பிரச்சினையால் அவஸ்தைப்பட்டு வருகிறீர்கள் என்று வையுங்கள், இந்த மாதிரி சமயங்களில் நீங்கள் வலது புறமாகப் படுத்துத் தூங்கும் போது நெஞ்சு எரிச்சல் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. அதே, இடது பக்கமாகச் சாய்ந்து தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் என்றால் மேற்கண்ட பிரச்சினை உடனடியாகத் தீர்ந்து விடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதய நலம் பாதுகாக்கப்படுகிறது

நீங்கள் இடது பக்கமாகப் படுத்துத் தூங்கும் போது உங்கள் இதயம் ஒரே சீராக இயங்க முடிகிறது. விழித்துக் கொண்டிருக்கும் போது மட்டுமல்ல தூங்கும் போதும் மனித இதயம் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். அந்த இயக்கத்தை சீர்படுத்த மனிதர்களின் உறங்கும் முறை இடது புறமாக இருக்க வேண்டுமென்கிறது அறிவியல். எனவே இதய நலனும் இதனால் மேம்படுகிறது.

நிணநீர் மண்டலத்திற்கு உதவுகிறது

நிணநீர் வடிகால் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உடலின் இடது புறம் உண்மையில் நம் நிணநீர் பக்கமாகும், இந்த பக்கமாகச் சாய்ந்து தூங்கும் போது நமது உடலால் மிகச்சீரான முறையில் கழிவு, நச்சுகள் மற்றும் நிணநீர் திரவம் போன்றவற்றை அகற்ற முடிகிறது.

குறட்டை நிறுத்துகிறது

குறட்டை நம்மைச் சுற்றி இருப்பவர்களின் தூக்கத்தைக் கெடுப்பதுடன் அது ஒரு பயங்கரமான சுகாதார பிரச்சினையாகவும் இப்போது கருதப்படுகிறது. குறட்டைப் பழக்கம் மற்றவர்களின் தூக்கத்தைக் கெடுப்பதோடு குறட்டை விடுபவர்களின் இதயத்திற்கும் மோசமான விளைவுகளைத் தரும். இப்படியான பிரச்சினைகள் ஏற்படக் காரணம் மூச்சுத்திணறல் குறைபாடு தான். அதைப் போக்கவும் இடது பக்கமாக உறங்கும் முறை உதவுகிறது என்கிறார்கள் Chiropractos.

சரி அவர்கள் தான் இவ்வளவு தூரம் உறுதியாகச் சொல்கிறார்களே! இரவில் சரியான தூக்கமில்லை என்று பகலில் தவிப்பவர்கள் இந்த முறைகளையும் ஒருமுறை முயற்சித்துத் தான் பாருங்களேன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.