குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெற்ற 2 கோடி கையெழுத்து; ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு
1 min read2 crore signatures received against the CAA; Handing over to the President
20/2/2020
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்தை ஜனாதிபதியிடம் கொடுத்தனர்.
கையெழுத்து இயக்கம்
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த சட்டம் இனி கொண்டுவரப்போகும் குடியுரிமை பதிவேடு சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகத்தில் திமுக கூட்டணிக்கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் நேரடியாக கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2-ந் தேதி தொடங்கி 8-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதில் சுமார் 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டதாக தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
இதுதொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், வைகோ, டி.கே.ரங்கராஜன், திருச்சி சிவா, கனிமொழி, வெங்கடேசன், திருமாவளவன் உள்பட தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பிக்கள் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று(புதன் கிழமை) நேரில் சந்தித்தனர்.
அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதமும் அளிக்கப்பட்டது.
டி.ஆர். பாலு பேட்டி
கையெழுத்து நகல்களை குடியரசு தலைவரிடம் ஒப்படைத்த பின் டி.ஆர். பாலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்டத்திருத்தம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என ஜனாதிபதியிடம் முறையிட்டோம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பத்தை ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.குடியரசு தலைவரிடம் 2 கோடி கையெழுத்து நகல் ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்தார்.