பெண் போலீசை காதலித்து ஏமாற்றிய ரயில்வே போலீஸ்காரர் கைது
1 min read24.2.2020
விழுப்புரத்தை அடுத்த கருங்காலிப்பட்டை சேர்ந்தவர் சரத்குமார் (28). விழுப்புரம் இருப்புப்பாதை காவல்நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் மீது, காணையைச் சேர்ந்த ராஜலட்சுமி (26) என்ற பெண், தன்னை காதலித்து ஏமாற்றியதாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காதநிலையில், பின்பு எஸ்பியிடம் புகார்மனு அளித்திருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரேவதி, விசாரணை நடத்தியதில், சரத்குமார், போலீஸ் வேலைக்கு சேர்ந்தவுடன் ராஜலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்ததும். தற்போது, அதே காவல்நிலையத்தில் பணியாற்றும் பிரியாங்காவை காதலித்து வந்ததால், திருமணத்திற்கு மறுத்ததாகவும் கூறப்பட்டது.
இதனை தட்டிக்கேட்ட ராஜலட்சுமியை, சரத்குமார், பிரியங்கா ஆகியோர் சேர்ந்து கொலைமிரட்டல் விடுத்ததால், இரண்டு போலீசார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தன்மீது புகார் அளித்த ராஜலட்சுமியை திருவாமாத்தூர் கோயிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார் சரத்குமார்.
இதனையறிந்த பிரியங்கா, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், தன்னை சரத்குமார் காதலித்து ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், நாங்கள் இருவரும் ஆயுதப்படையில் பணியாற்றிய போதே, பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தோம். தன்னிடம் ஆசைவார்த்தைகளை கூறி பலமுறை தவறாக நடந்து கொண்டதாகவும், இதில் கர்ப்பமடைந்து, சரத்குமார் வற்புறுத்தலின்பேரில் 4 முறை கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார்.
மேலும், தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன், என்னை ஏமாற்றிவிட்டு ராஜலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையறிந்து அவரது வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டேன். அப்போது சரத்குமார், அவரது உறவினரான நகர காவல்நிலையத்தில் போலீசாக பணியாற்றும் கீதா ஆகியோர் சேர்ந்து என்னை திட்டி, செருப்பு காலால் எட்டி உதைத்து வெளியேற்றிவிட்டனர். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அதன்பேரில் சரத்குமார், கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இரண்டு பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காதல் வலையில் வீழ்த்தி இளம்பெண்களை ஏமாற்றிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.