சொத்துக்காக 6 பேரை காென்ற பெண் சிறையில் தற்கொலை முயற்சி
1 min read27.2.2020
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாய் பகுதியை சேர்ந்தவர் டோம் தாமஸ் (75). இவரது மனைவி அன்னம்மா. இவரது மகன் ராய் தாமஸ். இவரது மனைவி ஜோளி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்தனர். கடந்த 2002ம் ஆண்டு அன்னம்மா திடீரென வீட்டில் சுருண்டு விழுந்து இறந்தார்.
அதை தொடர்ந்து டாம் தாமஸ் 2008ம் ஆண்டும், ராய் தாமஸ் 2011ம் ஆண்டும், பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்னம்மாவின் தம்பி மேத்யூ 2014ம் ஆண்டும், அதே ஆண்டு அன்னம்மாவின் இன்னொரு சகோதரரின் மகன் ஷாஜூவின் 2வயது குழந்தை, ஷாஷஜூவின் மனைவி 2016ம் ஆண்டு என்று அடுத்தடுத்து 6 பேரும் மர்மமான முறையில் இறந்தனர்.
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 6 பேர் மர்மமான முறையில் இறந்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கடந்த வருடம் கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் ராய்தாமசின் மனைவி ஜோளி தான் சொத்துக்காக அனைவருக்கும் சயனைடு கொடுத்து கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் ஜோளியை கைது செய்தனர். அதோடு அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஜோளி தற்போது கோழிக்கோடு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் 27ம் தேதி அதிகாலை சிறையில் கை நரம்பு அறுக்கப்பட்ட நிலையில் ஜோளி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த சிறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதைத் தொடர்ந்து டாக்டர்கள் ஜோளிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கை நரம்பை அறுத்து ஜோளி தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து சிறைத்துறையினர் விசாரித்து வருகின்றனர். சொத்துக்காக 6 பேரை காென்ற பெண் சிறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.