May 25, 2024

Seithi Saral

Tamil News Channel

மருமகளுக்கு பாலியல் தொல்லை -தட்டி கேட்ட மாமனார் கொலை

1 min read
Sexual harassment-prevented father-in-law murder

2.3.2020

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள கரிசவயலை சேர்ந்தவர் அய்யாதுரை, விவசாயி. இதே பகுதி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கணவன் இல்லாமல் பெண் தனியாக இருப்பதை அறிந்த அய்யாத்துரை (40) அந்த பெண்ணிடம் ஜாடைமடையாக பேசி வந்தார். அய்யாத்துரையின் எண்ணத்தை புரிந்து கொண்ட அந்த பெண் இவரிடம் சரியாக பேசவில்லை.

ஆனாலும் அய்யாத்துரை விடவில்லை. பலமுறை அந்த பெண்ணிடம் சென்று தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி உள்ளார். சில நேரங்களில் நள்ளிரவில் அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழையவும் முயன்றுள்ளார். தொடர்ந்து, 3 மாதமாக அய்யாத்துரை இதே சேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நிலைமை மோசமாகி வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது மாமனார் கணேசன் (60), மாமியார் பவளக்கொடி (55), நாத்தனார் சத்யா (33) ஆகியோரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த மூன்று பேரும் பிப்.29ம் தேதி இரவு அய்யாத்துரை வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த அய்யாத்துரை மற்றும் அவரது நண்பர்கள் செருபாலக்காடு வீரமணி, பாடுவான்கொல்லை பெரியசாமி ஆகியோர் மூன்று பேரையும் தரக்குறைவாக திட்டி தாக்கினர். திடீரென அய்யாத்துரையும், அவரது நண்பர்களும் அரிவாளை எடுத்து கணேசன் பவளக்கொடி, சத்யா ஆகிய 3 பேரையும் சரமாரி வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த கணேசன் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று இரவு கணேசன் இறந்தார். சத்யா, பவளக்கொடி ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அய்யாத்துரை, வீரமணி, பெரியசாமி ஆகிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.அய்யாத்துரைக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.