திருச்செந்தூர் அருகே ஒர்க்ஷாப் உரிமையாளர் வெட்டிக் கொலை
1 min read28.3.2020
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே என்.முத்தையாபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராஜதுரை (28). திருச்செந்தூர்-குலசேகரன்பட்டினம் சாலையில் டூ வீலர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவரது உறவினர் திருச்செந்தூர் அருகே தோப்பூர் மேலத் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் கணேசன்(57) தொழிலாளி.
27ம் தேதி இரவு ராஜதுரை, உறவினர் கணேசன் ஆகியோர் திருச்செந்தூர் அருகே தோப்பூர் கடற்கரையில் நண்டு பிடிக்க பைக்கில் சென்றனர். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் வழிமறித்து ராஜதுரை, கணேசன் ஆகிய இருவரையும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பினர்.
தகவல் அறிந்து திருச்செந்தூர் டிஎஸ்பி பாரத், கோயில் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமார், எஸ்.ஐ. ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜதுரை, கணேசன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு ராஜதுரை இறந்தார். கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இறந்த ராஜதுரைக்கு மனைவி தெய்வகனி(26) மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணேசனுக்கு மனைவி ராஜேஸ்வரி மற்றும் 2 மகன், 3 மகள்கள் உள்ளனர்.
போலீஸ் விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருச்செந்தூர் அருகே என்.முத்தையாபுரம் மற்றும் தோப்பூர் அருகே வண்ணாந்துறை விளையை சேர்ந்தவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 25ம்தேதி தோப்பூர் அருகே வண்ணாந்துறை விளையை சேர்ந்த பாலமுருகன், வதனராஜ், ரஞ்சித் ஆகியோரை என்.முத்தையாபுரத்தை சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதையடுத்து இருதரப்பினரும் முன்விரோதம் ஏற்பட்டு எதிரும், புதிருமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே 144 தடை உத்தரவு காரணமாக மோதல் தவிர்க்கப்பட்டு வந்த நிலையில் என்.முத்தையாபுரத்தை சேர்ந்த ராஜதுரை, அவரது உறவினர் கணேசன் ஆகியோர் தோப்பூர் கடற்கரையில் நண்டு பிடிக்க பைக்கில் சென்றனர்.
அப்போது அவர்களை ஏற்கனவே தாக்கப்பட்ட வண்ணாந்துறை விளையை சேர்ந்த பாலமுருகன், வதனராஜ், ரஞ்சித் தலைமையிலான கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து வெட்டியதில் ராஜதுரை உயிரிழந்து விட்டார். கணேசன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குபதிந்து தலைமறைவாக உள்ள பாலமுருகன்,
வதனராஜ், ரஞ்சித் உள்ளிட்ட கும்பலை தேடி வருகின்றனர். 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருச்செந்தூர் அருகே கடற்கரையில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.