பரவை முனியம்மா காலமானார்
1 min read29.3.2020
பிரபல நாட்டுப்புற பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா (83), 29ம் தேதி காலை உடல்நலக் குறைவால், மதுரை அருகே பரவையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். முதுமை காரணமாக அவரது உடல்நிலை மேலும் நலிவடைந்தது. இதனால் அவர் நடமாட்டமின்றி வீட்டிலேயே இருந்தார். 29ம் தேதி அதிகாலை 2 மணியளவில் அவரது உடல்நிலை மேலும் மோசமானது. பின்னர் அதிகாலை 3 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
நாட்டுப்புற பாடல்களால் பிரபலமான இவர், தூள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் கால் பதித்தார். தொடர்ந்து காதல் சடுகுடு, ஏய், சண்டை, தமிழ்படம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த, மான் கராத்தே என்ற படத்தில் நடித்தார்.
நாட்டுப்புற பாடல்களில் முத்திரை பதித்த இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியுள்ளது. இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவரது கடைசி மகன் செந்தில்குமார் மூளை வளர்ச்சி குன்றியவர்.
தமிழக அரசு தற்போது பரவை முனியம்மாவுக்கு வழங்கி வரும் உதவித்தொகையை, இனிமேல் அவரது மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பரவை முனியம்மாவின் இறுதிச்சடங்கில், பிரபலங்கள் யாரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.