வெளியே வருபவர்களை போலீஸ் அடிப்பதாக வழக்கு; ஐகோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு
1 min readPolice beaten by outsiders; Judgment of High court Judges
31–/-3/2020
ஊரடங்கு உத்தரவு காலத்தில் வெளியே வருபவர்களை போலீசார் அடிக்கிறார்கள் என்றும் அதை தடுக்க வேண்டும் என்றும் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அவசியமில்லாமல் வெளியில் வந்தால் ஐகோர்ட்டு ஒன்றும் செய்ய முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
போலீசார் அடிக்கிறார்கள்
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக பால், மளிகை, உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்டவைகள் திறந்து வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் மீது போலீசார் அடித்தும் தாக்குதல் நடத்தியும், தண்டனைகளை வழங்கியும் துன்புறுத்துகின்றனர்.
இது சட்டவிரோதமான மனிதாபிமானமற்ற செயல். ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களை போலீசார் கைது செய்யலாம், அவர்களை தண்டிக்கக் கூடாது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது சாலைகளில் நடமாடும் பொதுமக்களை எந்தவித காரணமும் இல்லாமல் அடித்து துன்புறுத்தக் கூடாது என தமிழக உள்துறை மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
விசாரணை
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு வரலாற்றில் முதன் முறையாக வாட்ஸ் அப், வீடியோ கால் மூலம் விசாரணை நடைபெற்றது.
அப்போது அரசு தரப்பில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 17,118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் அரசு எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
ஒன்றும் செய்ய முடியாது
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமில்லாமல் வெளியில் வந்தால் கோர்ட்டு ஒன்றும் செய்ய முடியாது.
தமிழகத்தில் உள்ள கடைகோடி சராசரி மனிதன் இதனால் பாதிக்க கூடாது. அதே சமயம் இந்திய அரசியலமைப்பு சட்டம் தனி மனிதனுக்கு வழங்கிய உயிர் வாழும் உரிமையும் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக குறிப்பிட்ட எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றாலும் நடுநிலையான அணுகுமுறையை கையாள வேண்டியுள்ளது. மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.