நயன்தாரா, தேவயானிக்கு குரல் கொடுத்த தீபா வெங்கட்
1 min read
Deepa Venkat, who voiced Nayanthara and Devayani
“‘போடா… போ. உனக்கு ஊர்ல தேன்மொழி, கனிமொழின்னு எவளாச்சும் வாய்க்கா வரப்புல திரிஞ்சுட்டு இருப்பா. அவளைத் தேடித்தேடி லவ் பண்ணு. நான்லாம் உனக்கு செட்டே ஆக மாட்டேன்”.என்று நயன்தாரா ராஜா ராணி படத்தில் வசனம் மிகவும் பிரபலம். இந்த வசனத்திற்கு உண்மையிலேயே சொந்தக்காரர் யார் தெரியுமா? இந்த வசனத்துக்கு வாய் அசைத்ததுதான் நயன்தரா…. ஆனால் குரலுக்கு சொந்தக்காரர் தீபா வெங்கட்
தீபா வெங்கட் என்றவுடன் அனைவருக்கும் டெலிவிஷன் நடிகை என்பதுதான் நினைவுக்கு வரும். இவரை டெலிவிஷனில் பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர் சித்தி, அண்ணாமலை, சாரதா, கோலங்கள் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் டெலிவிஷன் நடிகை என்பது மட்டும் அல்ல. சிற்சில சினிமா படங்களிலும் நடித்திருக்கிறார். தில், உள்ளம் கொள்ளை போகுதே, கண்டேன் காதலை போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவரை சிலர்தான் சினிமாவில் பார்த்திருக்கலாம். ஆனால் இவரனது பங்களிப்பு உள்ள சினிமா படங்கள் ஏராளம். பல்வேறு படங்களில் தோன்றும் நாயகிகளுக்கு தன்னுடைய வசீகர குரல் மூலம் உயிர் கொடுத்தவர் இவர். ஆமாம் இவர் பிரபல நடிகைகள் பலருக்கு இவர் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
அது மட்டும் வானொலி தொகுப்பாளினியாகவும் இவர் பரிமளித்துளார்.
இவரது சிறந்த நடிப்பிற்காக 2007 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்தது.
தீபா வெங்கட் 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந் தேதி மும்பையில் பிறந்தார். சிறுமியாக இருக்கும்போதே சென்னைக்கு இவர்களது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டது.
1994-ம் ஆண்டில் பாச மலர்கள் என்ற சினிமா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்தப் படத்தை சுரேஷ் சந்திர மேனன் இயக்கி இருந்தார். இதில் அரவிந்த்சாமி, ரேவதி, அஜீத் குமார் உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
தீபா வெங்கட் 1994-ம் ஆண்டு வானொலி பணியில் அடியெடுத்து வைத்தார். அதை தொடர்ந்து 1997ல் அஜித் குமார், விக்ரம் மற்றும் மகேஷ்வரி நடித்த உல்லாசம் என்ற திரைப்படத்தில் விக்கிரமின் தோழியாக அதிதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 1998 இல் தினம்தோறும் என்ற திரைப்படத்திலும் 2001-ம் ஆண்டு மாதவன், சிம்ரன், ஸ்னேகா நடித்த பார்த்தாலே பரவசம் என்ற திரைபபடத்திலும் மற்றும் விக்ரம், லைலா நடித்த தில் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ரமின் தங்கையாக அமலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதே ஆண்டில் சுந்தர் சி இயக்கத்தில் பிரபுதேவா, கார்த்திக் மற்றும் அஞ்சலா ஜவேரி நடித்த உள்ளம் கொள்ளை போகுதே என்ற திரைபபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த பாபா என்ற திரைப்படத்திலும், 2003ல் ராமச்சந்திரா படத்திலும் 2009-ம் ஆண்டில் கண்டேன் காதலை படத்திலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
டெலிவிஷன்
1997-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய மின் மினி என்ற டெலிவிஷன் தொடரிலும் நாகாவின் ரமணி விஷ் ரமணி என்ற தொடரிலு் நடித்தார்.
அதை தொடர்ந்து இப்படிக்கு தென்றல் என்ற தொடரில் நடித்தார். 1999-ம் ஆண்டு ராதிகாவின் ராடன் நிறுவன் தயாரித்த சித்தி தொடரில் விஜி என்ற முக்கிய வேடத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2002-ம் ஆண்டு ராதிகாவின் அண்ணாமலை தொடரிலும் நடித்தார்.
2003-ம் ஆண்டு திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் என்ற தொடரில் உஷா என்ற பாத்திரத்தில் நடித்தார். இந்த் தொடரில் நடிகை தேவயானியுடன் நடித்துள்ளார். இந்த தொடர் 2003-ம் ஆண்டு மே 26-ந் தேதி முதல் 2009-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி வரை சன் டி.வி.யில் ஒளிபரப்பானது.
அதன்பின் சன் டி.வி்.யில் ரோஜா என்ற தொடரிலும் விஜய் டி.வி.யில் பயணம் என்ற தொடரிலும், ஜெயா டி.வி.யில் அக்னி பிரவேசம் என்ற தொடரிலும் நடித்துள்ளார்.
2005- சன் தொலைக்காட்சியில் சூர்யா என்ற தொடரில் நடித்தார் அதை தொடர்ந்து 2006 இல் ராஜ் தொலைக்காட்சியில் சாரதா என்ற தொடரிலும் 2008 இல் ஏவிஎம் இன் கீதாஞ்சலி என்ற தொடரிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சியம் என்ற தொடர் ஆகும். இந்த தொடர் 2008 முதல் 2010 வரை ஒளிபரப்பானது. இவர் இதுவரைக்கும் 70 மேட்பட்ட தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மெயின் ஹூன் ரகவாலா என்ற ஹிந்தி திரைப்படத்தில் குரல் கொடுக்கும் குழந்தை நட்சத்திரமாக குரல் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல சிறுவர் வரகதை தொடர்களுக்கு குரல் கொடுத்து வந்தார்.
இவர் 2000 ஆண்டில் அப்பு என்ற திரைப்படத்திற்க்காக நடிகை தேவயானிக்கு குரல் கொடுத்தார். அதை தொடர்ந்து சினேகா, சிம்ரன், நயன்தாரா, சங்கீதா, தன்சிகா, அனுசுக்கா செட்டி, ஜோதிகா, காஜல் அகர்வால் போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.
இவர் 2011 ல் மயக்கம் என்ன என்ற திரைப்படத்திற்கு ரிச்சா கங்கோபாத்யாய் என்பவருக்கு குரல் கொடுத்ததற்க்காக நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த குரல் நடிககைக்கான விருதை பெற்றுள்ளார்.
இவர் ஹலோ எப். எம் என்ற வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ராஜகோபால் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
பேட்டி
தீபா வெங்கட்டு தனது கலையுலக பயணத்தை இங்கே விவரிக்கிறார்….
என்னோட முதல் மீடியா அனுபவமே டப்பிங்தான். நான்.. எட்டாவது படித்துக் கொண்டிருந்தபோது, தெரிஞ்ச பேமிலி பிரெண்டு மூலமா டப்பிங் ஆடிஷன்ல . வாய்ஸ் டெஸ்ட் எடுத்தேன்.இதில் ஓ.கே. ஆகவே, இந்தி கார்ட்டூன் சேனலுக்குச் சென்னையில் இருந்தே டப்பிங் பேசிக் கொண்டு இருந்தேன்.
அந்தச் சின்ன வயசுலயே ‘ஹா….ஹே’னு ஓவர் ரியாக்ஷனோடு பேசி நடிப்பேன். அதன்பின் சினிமா வட்டாரத்துல தெரிய ஆரம்பித்து அடுத்தடுத்த ஆக்டிங் வாய்ப்புகளும் வந்துச்சு. அப்படித்தான் ‘பாசமலர்கள்’ படத்திலும், பாலசந்தர் சாரோட ‘கையளவு மனசு’ சீரியலிலும் நடிச்சேன்.
டப்பிங் பேசினாலம் பள்ளி படிப்புக்குப் பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொண்டேன். ஆனால் பின்னர் நடிகையாக ஆனதால் கல்லூரிக்கு சென்று படிக்க முடியவில்லை.இதனால் கரஸ்ல பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்தேன்.
‘அப்பு’ படத்தில் தேவயானிக்கு டப்பிங் பேசினேன். அதுதான் ஹீரோயினுக்காக முதன்முதலா பேசினது. நல்ல வரவேற்பு கிடைக்க, நிறைய நடிகைகளுக்கு வரிசையா டப்பிங் பேசினேன். ‘தில்’, ‘ஆனந்தம்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘ஏழுமலை’, ‘வாரணம் ஆயிரம்’, ‘வெடி’, ‘மயக்கம் என்ன’, ‘தெய்வத்திருமகள்’, ‘ருத்ரமாதேவி’ என நான் டப்பிங் பேசின படங்களின் லிஸ்ட் ரொம்பப் பெருசு. சினேகா, சிம்ரன், அனுஷ்கா, நயன்தாரா போன்ற நடிகைகளுக்கு அதிகமாக டப்பிங் பேசி இருக்கிறேன்.
” ‘ஏழுமலை’ படத்தில் படத்தில் சிம்ரன் கோபப்பட்டு, குடும்பத்தார் எல்லோரையும் திட்டும் காட்சியில் கஷ்டப்பட்டு டப்பிங் பேசினேன்.’
மயக்கம் என்ன’ படத்தில் டப்பிங் பேசியதை என்னால் மறக்க முடியாது. அப்போது நான் கர்ப்பம் அடைந்திருந்தேன். அந்தப் படத்தில் ரிச்சா கங்கோபாத்யாயா
கர்ப்பம் கலைஞ்சு அழும் காட்சியில். நிஜமாவே உணர்ச்சி வசப்பட்டு டப்பிங் பேசினேன்.
‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தில் அமலாபாலுக்கு டப்பிங் பேசும்போது நான் நிறைமாத கர்ப்பிணியா இருந்தேன். என்னால் சரியாக உட்கார்ந்து பேச முடியவில்லை. எனவே, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து, இன்னொரு நாற்காலியில் கால்களை வைத்துகொண்டு பேச ஏற்பாடு செய்து கொடுத்தாங்க.
. பதினேழு வருஷமா டப்பிங் பேசினாலும், ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவுக்கு டப்பிங் பேசினப் பிறகுதான் அதிகம் பேசப்பட்டது.. அந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில்தான் நான் முதன்முறையாக நயன்தாராவை பார்த்தேன்.
,இவ்வாறு தீபா வெங்கட் தனது பயண பாதையை கூறினார்.