போலீஸ்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
1 min readபோலீஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
27.5.2020
மதுரை மேலமடையில் உள்ள பள்ளிவாசல் தெருவின் பின்பகுதியில் குடியிருப்பவர் சலீம். இவரது மகன் ஷாஜகான்(25). இவர் சென்னை மாநகர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் கடந்த வாரம் மதுரை வந்துள்ளார். கடந்த 23ம் தேதி ஷாஜகான், தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த ரவுடிகள் குடிபோதையில் வந்து அவரிடம் தகராறு செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஷாஜகான் கொடுத்த புகாரின் பேரில், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யா, பாலமுருகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் 26ம் தேதி நள்ளிரவு ஷாஜகான் வீட்டை நோக்கி, மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். அது வீட்டின் காம்பவுண்ட் சுவர் படியின் மீது விழுந்து, வெடித்து தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து தெருமுனை வரை ஓடிச் சென்று, நின்றுவிட்டது. அங்கு கிடைத்த தடயங்களை தடயவியல் துறையினர் சேகரித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு, போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மேலமடையை சேர்ந்த முருகனை கைது செய்து, அவரிடம் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரவுடிகள் பாலமுருகன் மற்றும் சூர்யாவின் கூட்டாளி என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் போலீஸ்காரர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.