சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா ; தலைமை நர்ஸ் சாவு
1 min readCoroner dies Chennai hospital hospital chief nurse
28-5-2020
சென்னையில் கொரோனாவு தாக்குதல் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரி தலைமை நர்ஸ் பரிதாபமாக இறந்தார்.
சென்னையில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95-ஆக உள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
ராயபுரம்
அதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,252 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் 1,559 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,325 பேருக்கும், அண்ணாநகரில் 1,046 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 1,262 பேரும், தேனாம்பேட்டையில் 1,317 பேரும், திருவொற்றியூரில் 369 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 777 பேருக்கும், பெருங்குடியில் 212 பேருக்கும், அடையாறில் 672 பேருக்கும், அம்பத்தூரில் 504 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 165 பேருக்கும், மாதவரத்தில் 274 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 208பேருக்கும், மணலியில் 168 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. ‘
நர்ஸ் சாவு
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 58 வயதான பெண் தலைமை நர்ஸ் ஜோன் மேரி பிரிசில்லா கொரோனாவுக்கு இறந்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் செவிலியர்களுக்கான பணிநேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கவனித்து வந்தார்.
இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 26-ந்தேதி முதல் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். கொரோனா உறுதி செய்யப்பட்டு உயிரிழந்த முதல், தலைமை பெண் செவிலியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கே.கே.நகர், திருவொற்றியூர், செங்குன்றத்தை சேர்ந்த 3 ஆண்கள் மற்றும் புளியந்தோப்பை சேர்ந்த முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.