சாத்தான்குளம் சம்பவம்; ராகுல் காந்தி கடும் கண்டனம்
1 min read
Rahul Gandhi condemns Sathankulam incident
26-6-2020
சாத்தான் குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இருவரும் போலீஸ் காவலில் இறந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தந்தை-மகன்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல் போன் கடை வைத்திருந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ்.
இவர்களின் கடையை அடைக்கச் சொன்னதில் ஏற்பட்ட தகராறில் சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக ஜெயராஜை அழைத்துச் சென்றனர். அப்போது அவரை போலீசார் அடித்ததாக வும் அதை அவரது மகன் பென்னிக்ஸ் சென்று கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தந்தை மகன் இருவரும் கோவில் பட்டி சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டனர். அதன்பின் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். உடல்நல பாதிப்பால் அவர்கள் இறந்ததாக போலீசார் கூறுகிறார்கள்.
ஆனால் போலீசார் அவர்களை அடித்தே கொன்று விட்டதாக அவரது குடும்பத்தார், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் நடத்தினர். பலர் கண்டனம் தெரிவித்தனர்.
ராகுல் காந்தி
இப்போது இந்த சம்பவத்திற்கு ராகுல்காந்தி கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
போலீசார் இப்படி மிருகத்தனமாக தாக்கி இருப்பது குற்றமாகும். மக்களை பாதுகாப்பவவர்களே ஒடுக்குமுறையாளராக மாறுவது மோசமான ஒன்று. இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயராஜ், பென்னிக்ஸ் சாவுக்கு உரிய நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.