சாத்தன்குளத்தில் மாஜிஸ்திரேட்டை ஒருமையில் பேசி மிரட்டிய போலீஸ்காரர்
1 min read29.6.2020
Policeman threatened magistrate in sathankulamசாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் மரணமடைந்தது தொடர்பாக விசாரணை நடத்தும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தனது அறிக்கையை 29ம் தேதி மாலை இ-மெயில் மூலம் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் மாலையில் பிறப்பித்த உத்தரவு:
கோவில்பட்டி மாஜிஸ்திரேட் அறிக்கை பெறப்பட்டது. அதில், மாவட்ட காவல்துறை நிர்வாகம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முடிந்தவரை மாஜிஸ்திரேட் விசாரணையை தடுக்கின்றனர். கூடுதல் எஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் சாத்தான்குளம் காவல் நிலையத்திலேயே உள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணையை முழுமையாக போலீசார் வீடியோ பதிவு செய்கின்றனர். தேவையான ஆவணங்களை தர போலீசார் மறுக்கின்றனர்.
மகாராஜன் என்ற போலீஸ்காரர், ‘உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா’ என மாஜிஸ்திரேட்டை நோக்கி ஒருமையில் பேசியுள்ளார். எனவே, இந்த அறிக்கையின் அடிப்படையில், தூத்துக்குடி கூடுதல் எஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோர் மீது இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்கிறோம்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி மற்றும் போலீஸ்காரர் ஆகியோரை உடனடியாக பணியிட மாறுதல் செய்ய வேண்டும். அப்போது தான், இந்த வழக்கின் விசாரணை நேர்மையாக நடைபெறும். இந்த மூவரும் 30ம் தேதி (இன்று) விசாரணையின்போது காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். இவர்களுடன் டிஐஜி மற்றும் எஸ்பி ஆகியோரும் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.