சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் ஏட்டு ரேவதிக்கு பாதுகாப்பு
1 min readசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் ஏட்டு ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என மதுரையில் தென்மண்டல ஐஜி முருகன் தெரிவித்தார்.
தென்மண்டல ஐஜியாக பதவியேற்றுக் கொண்ட முருகன், மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான மோதல்கள் 1990ம் ஆண்டுகளில் இருந்த அளவிற்கு தற்போது இல்லை. தற்போது காவல்துறையின் நடவடிக்கையால் குறைந்துள்ளது. அனைத்து மாவட்ட எஸ்பி மட்டும் டிஜஜிடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்படும். சைபர் கிரைம் குற்றங்கள் தற்போது தனிநபர் குற்றங்களாக மாறியுள்ளது. மின்னஞ்சல் வழியாக புகார் அளித்தால் போதும் அந்தந்த காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்.
சாத்தான்குளம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட காவலர்கள் அரசு விதிப்படி 48 மணி நேரம் காவலில் இருந்தாலே சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். பதவி ஏற்பதற்கு முன்பாகவே சாத்தான்குளம் சென்று நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்துள்ளேன். தற்போது மீண்டும் சாத்தான்குளம் செல்ல இருக்கிறேன். காவல் துறையினருக்கு போதுமான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதை முறையாக பின்பற்றினாலே இது போன்ற நிகழ்வுகள் நடக்காது. முக்கியமாக, சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த தலைமை காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது,’’என்றார்.