May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

தாக்க வந்த யானையை சுட்டுக்கொன்ற சகோதரர்கள்

1 min read

3.7.2020

Brothers who shot dead elephant

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தங்களை தாக்க வந்ததால் பெண் யானையை சுட்டுக்கொன்றதாக கைதான சகோதரர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கண்டியூர் வனப்பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யானையின் இடது பக்க காதின் ஓரத்தில் சிறிய காயமும் அதிலிருந்து ரத்தமும் கசிந்து கொண்டிருந்தது.

உடலில் சில பாகங்களில் சிறிய காயங்களும் இருந்தன. மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் யானையை பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் அடக்கம் செய்தனர். பிரேத பரிசோதனையில், யானையின் தலையில் ஈயக்குண்டு தாக்கி மூளை வரை துளைத்திருந்தது தெரியவந்தது.

யானை கிடந்த தோட்டப்பகுதியை சகோதரர்களான தேக்கம்பட்டியை சேர்ந்த ராமசாமி (60), கிருஷ்ணசாமி (58) ஆகியோர் குத்தகைக்கு எடுத்து சீமை புல் பயிரிட்டுள்ளனர். அவர்களை பிடித்து ரேஞ்சர் செல்வராஜ் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘நிலத்தில் பயிரிட்டுள்ள சீமைப்புல்லை சாப்பிட யானை வந்தது. நாங்கள் பட்டாசு வெடித்து விரட்டினோம். ஆனாலும் அந்த இடத்தை விட்டு யானை செல்ல மறுத்தது. திடீரென்று எங்களை தாக்க ஓடி வந்தது. அதனால், பாதுகாப்புக்காக வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டோம்’’ என்று கூறினர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.