அமுதாவின் ஆசைகள்-5 / நாடகம்/ கடையம் பாலன்
1 min readAmuthavin Asaikal-5/ Drama by Kadayam Balan
காட்சி 5
இடம்- சாலையோரம்
பங்கேற்பவர்கள்- கைசூப்பி கைலாசம், விமலா, ராஜேஷ்
================
கைசூப்பி கைலாசம்: (அங்கும் இங்கும் எட்டிபார்த்தபடி) யாருமே இல்லை. நாக்கு செத்துபோச்சி. கொஞ்சநேரம் சப்பிக்கிடுவோம்…. ஆஹா எத்தனை மிட்டாய் சாப்பிட்டாலும் விரலை சப்புறதுல உள்ள சுகமோ தனிசுகம். இதனை உணராத மரமண்டைகள் என்னை போய் கிண்டல் பண்ணாறங்க. ஒரு வாட்டி கை சூப்பி பாருங்கடா அப்போ தெரியும் இதன் அருமை.
(அந்த நேரத்தில் விமலா வருகிறாள். சூப்பிய கையை கைலாசம் எடுத்து விடுகிறான்)
வா… விமலா… நான் நினைச்சேன் வந்துட்டே.
விமலா: என்ன கைலாசம் ஒரே சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது. கையில என்ன?
கைலாசம்: கை… கை… ஒண்ணுமே இல்லை.
விமலா: இல்லை கையெல்லாம் ஈரமா இருக்கே…
கைலாசம்: அது… அது…. வாயில.. இன்னிக்கு கறி சோறு சாப்பிட்டேன். பல்லுல கறி நாறு சிக்கிட்டுது. அதை எடுத்துக்கிட்டு இருந்தேன்.
விமலா: ச்சே ச்சே…
கைலாசம்: என் எச்சி, நாத்தம் எல்லாம் எடுக்காது. கையை நல்லா துடைச்சிட்டேன். விமலா… விமலா… நீன்னா எனக்க உசிரு. உனக்கு என்ன வேணுமின்னாலும் கேளு. நான் வாங்கித் தாரேன்.
விமலா: எனக்கு ஒரு செயின் வாங்கித் தாயேன்.
கைலாசம்: தாரேன் கோவில் திருவிழா அன்னிக்கு குழல்காரன்கிட்ட நல்ல செயினா வாங்கித் தரேன்.
விமலா: அய்யோ இப்படி வழியிரானே. வழியதுக்கும் ஒரு தகுதி வேண்டாமா?
கைலாசம்: என்ன சொன்ன விமலா?
விமலா: இல்லை, செயின் வாங்கித் தாரேன்னு சொன்னியே அதுக்கு பணம் இருக்கா?
கைலாசம்: இருக்கு நம்ம ராஜேஷ் அண்ணன் பணம் தர்றதா சொல்லி இருக்கான். ஆமா அவன் நம்மள பத்தி உங்கிட்ட சொன்னானா?
விமலா: என்னது சொன்னாரான்னு கேட்கிற.
கைலாசம்: அது எனக்கு வெட்கமா இருக்கு. அண்ணன் சொல்லுவாரு.
(அந்த நேரத்தில் ராஜேஷ் வருகிறான்)
கைலாசம்: அண்ணேன் நம்மள பத்தி விமலாக்கிட்ட சொல்லி வையுங்க. எனக்கு இங்க நிக்க வெட்கமா இருக்கு.(போகிறான்).
விமலா: என்னங்க இப்படியா என்னை காக்க வைக்கிறது. இந்த கைசூப்பிக்கிட்ட மாட்டிக்கிட்டு படாதபாடு பட்டுட்டேன். ஆமா எங்கிட்ட என்ன சொல்லச் சொன்னான்.
ராஜேஷ்: அவனா? உன்னை காதலிக்கிறானாம்.
விமலா: என்னங்க உளருறீங்க.
ராஜேஷ்: ஆமா விமலா உங்கிட்ட சொல்லி நான்தான் உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கணுமாம்.
விமலா: அசிங்கம் பிடிச்சவன். நீங்க அவனை சும்மாவா விட்டீங்க.
ராஜேஷ்: விமலா அவன் ஒரு கோமாளி. அவனை நான் கைப்பிள்ளையா வைச்சி, அசோக்குமாருக்கு எதிரா காய நகர்த்தப்போறேன்.
விமலா: நானும் அதுக்கு துணையா நிற்பேங்க. எப்படியாவது நான்… இல்ல நாம பணக்காரங்களா ஆகணும்.
ராஜேஷ்: நாம அவங்க குடும்பத்தில புகுந்து குட்டைய கிளப்பணும். அது மூலம் நமக்கு வேண்டியதை சம்பாதிக்கணும்.