அமுதாவின் ஆசைகள்-7 / நாடகம்/ கடையம் பாலன்
1 min read
Amuthavin Assaikal – 7 (Drama by Kadayam Balan
காட்சி 7
இடம்- அசோக்குமார் வீடு
பங்கு பெறுபவர்கள்- அமுதா, ராஜேஷ், அசோக்குமார்,
=================
அமுதா: இந்த மனுஷனை கட்டிக்கிட்டு என்ன சுகத்தை கண்டேன். வாழ்க்கையில முன்னேறதுக்கு ஏதாவது ஐடியா சொன்னா கேட்க மாட்டேங்கிறாரு. நாம ஏதாவது செய்த சண்டைக்கு வர்றாரு. என்ன மனுஷனோ?
ராஜேஷ்:(வந்தபடி) என்ன அசோக்குமார் இல்லியா?
அமுதா: அவரு இப்பத்தான் சாப்பிட்டுட்டு போறாரு. என்ன ஏதாவது பணம் வேணுமா?
ராஜேஷ்: பணமா எனக்கா? அன்னிக்கு பேங்க் லீவு. கையில அவசரத்துக்கு பணம் இல்லாம இருந்துச்சி. அதான் கேட்க வந்தேன். என்கிட்ட இல்லாத பணமா?
அமுதா: அப்படியா? உங்க கிட்ட நிறைய பணம் இருக்கா… எனக்கு கல்யாணம் ஆனப்போ… ரொம்ப கஷ்டப்பட்டிங்கன்னு கேள்விப்பட்டேன்.
ராஜேஷ்: அதெல்லாம் ஒரு காலம். இப்ப நான் நிறைய தொழில்ல முதலீடு பண்ணியிருக்கேன்.
அமுதா: அதுகெல்லாம் பணம் வேணுமே. பணத்துக்கு என்ன செய்தீங்க?
ராஜேஷ்: ஆரம்பத்திலே ஒரு தங்க செயினை அடமானம் வச்சி பங்கு மார்க்கெட்ல போட்டேன். நான் வாங்கிய பத்திரம் நல்ல விலைக்கு போச்சு. அதுல நிறைய பணம் கிடைத்தது. அப்புறம் நெட்கேம்லயும் பணம் கிடைச்சுது. அப்படி கொஞ்சம் கொஞ்சமா பணத்தை சேர்த்த நல்ல கம்பெனியில ஷேர் வாங்கி வச்சிருக்கேன்.
அமுதா: ஓ அப்படியும் பணம் சம்பாதிக்கலாமா? எனக்கும் அப்படி ஏதாவது செய்து தாருங்களேன்.
ராஜேஷ்: பணமே இல்லாத நானே இப்படி சம்பாதிச்சிருக்கேன். உங்க புருஷன் வசிதியானவர்தானே-. அவரு நினைச்சா எப்படியோ வாழலாம்.
அமுதா: அவரு கிடக்கிறாரு. அவருக்குத்தான் அறிவே இல்லியே.
ராஜேஷ்: என்ன நீங்க சொன்னா கேட்கமாட்டார?
அமுதா: நான் சொன்னத கேட்டிருந்தா எப்படியோ முன்னேறி இருப்போமே. ஏதாவது கேட்டா ஒரே சண்டைதான். ஒரு நாளும் நிம்மதியா தூங்கினது கிடையாது. இந்த மனுஷனை கட்டிக்கிட்டு நான் படுதபாடு சொல்ல முடியாது.
ராஜேஷ்: அசோக்குமார் உங்க சொல்படி கேட்கலைன்னா, உங்க பேரு சொத்து இருக்குன்னு சொன்னீங்களே, அதை வைச்சி முன்னேறலாம்.
அமுதா: அதை விற்கணுன்னு சொல்றீங்களா? அந்த ஒண்ணுதானே எனக்கு பக்கபலமா இருக்கு.
ராஜேஷ்: அதை விற்க வேண்டாம். அதை காட்டி பேங்கல பணம் வாங்கி அதை வச்சி நீங்க முன்னேறிடலாம்.
அமுதா: என்ன இதைஎல்லாம் ஏன் எங்கிட்ட முன்னாடியே சொல்லல.
ராஜேஷ்: உங்க வீட்டில என்னை யாரு மதிச்சீங்க. இப்பாதான், நீங்க உங்க புருஷங்கிட்ட கஷ்டப்படறதா அந்த கைசூப்பி சொன்னான். அதான் உங்களுக்கு உதவலாம்ன்னு வந்தேன்.
அமுதா: சரி இப்போ நாம என்ன செய்யணும்.
ராஜேஷ்: முதல்ல உங்க அசோக்குமார்கிட்ட இத பற்றி சொல்லுங்க. அவரு என்ன சொல்வாரோ?
அமுதா: அவரை நம்பி ஒண்ணும் நடக்காது. நாமளே களத்தில இறங்க வேண்டியதுதான்.
ராஜேஷ்: சரி அப்போ உங்க சொத்து பத்திரத்தை எடுத்து வையுங்க. நான் நாளைக்கு வந்து உங்களை பார்க்க வாரேன்.
(ராஜேஷ் செல்கிறான்)
அமுதா: எப்பா இன்னிக்குத்தான் நமக்கு வழி பிறந்திருக்கு. இந்த சந்தோஷத்தை எப்படி கொண்டாடுததுன்னே தெரியலியே. ம்…. அவரு வர்றதுக்குள்ளே ஏதாவது சுவீட் செய்து வைப்போம்.
(உள்ளே செல்கிறாள்.. &லைட் ஆப் செய்து போடப்படுகிறது.)
அமுதா: நமக்கு விடிவுகாலம் பிறந்தாச்சி.
(அசோக்குமார் வருகிறான்.)
அமுதா: வாங்க வாங்க ஏங்க இன்னிக்கு இவ்வளவு லேட்?
அசோக்குமார்: ஏண்டி இன்னிக்கு நான் அரை மணி நேரத்துக்கு முன்னாடி வந்திருக்கேன். லேட்டுன்னு சொல்ற?
அமுதா: அப்படியா இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
அசோக்குமார்: அப்படி என்ன சந்தோஷம்?
அமுதா: முதல்ல இந்த சுவீட்ட சாப்பிடுங்க.
அசோக்குமார்: (தனக்குள்) அய்யய்யோ என்ன வில்லங்கத்தை கொண்டு வந்திருக்காளோ தெரியலியே..
அமுதா: என்ன சொன்னீங்க?
அசோக்குமார்: இல்ல அப்படி என்ன சந்தோஷமான செய்தி… உன் தங்கச்சி படிப்பில ஏதாவது பிரைஸ் வாங்கி இருக்காளா? அல்லது செத்துப்போன உங்க அம்மா உயிரோட வந்திட்டாங்களா?
அமுதா: அதுல்ல என்னங்க சந்தோஷம்…
அசோக்குமார்: அதுல சந்தோஷம் இல்லியா? உங்க அம்மையோட வேற எதுல சந்தோஷம்.
அமுதா: சும்மா இருங்கங்க… கடவுள் இப்பத்தான் கண்ண திறந்திருக்காரு. நாம முன்னேறுவதற்கு ஒரு நல்ல வழி கிடைச்சிருக்கு…
அசோக்குமார்: இப்ப நமக்கு என்ன குறை? சரி அப்படி என்னடி வழி கண்டு பிடிச்ச?
அமுதா: நம்ம ராஜேஷ் இருக்காருல்ல… அவரு வந்தாரு..
அசோக்குமார்: ஓ அந்த வில்லங்கம்தான் வந்ததா?
அமுதா: அப்படி எல்லாம் சொல்லாதீங்க. அவரு ஏதோ பங்குமார்க்கெட்ல ஏராளமா பணம் சம்பாதிச்சிருக்காரா. நமக்கும் அந்த ஐடியாவை சொல்லித்தாரேன்னு சொன்னாரு.
அசோக்குமார்: அவன் பணம் சம்பாதிச்சானா? பரதேசிப்பய. அவங்கிட்ட ஏதுடி பணம்.
அமுதா: இல்லைங்க. நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா அவரு யாருக்கும் தெரியாம பணம் வச்சிருக்காரு.
அசோக்குமார்: அமுதா நான் சொல்றத கேளு. அந்தப்பயல நம்மாத. ஊரை ஏமாத்தி உலையில போட்டுடுவான்.
அமுதா: போங்க உங்களுக்கு முன்னேறவும் தெரியாது. நான் முன்னேறி காட்டுதேன்.
அசோக்குமார்: இதோ பாரு. அவனை நம்பாதே. நம்மள நட்டாத்துல விட்ருவான்.
அமுதா: ஆமா உங்கள நம்பி நம்பி..-. வாழ்க்கை பூரா இப்படி இருந்து சாகவேண்டியதுதான்.
அசோக்குமார்: ஏண்டி நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். எதிர்த்து எதிர்த்து பேசற.
(அடிக்கிறான்)
அமுதா: அடிச்சிட்டிங்க இல்ல. ஒரு பொம்பளய கட்டின பொட்டாட்டிய கை நீட்டி அடிச்சிட்டிங்க இல்ல. மறக்க மாட்டேன். நான் இத ஒரு நாளும் மறக்க மாட்டேன்.
அசோக்குமார்: என்னடி செய்வே.
அமுதா: செய்வேன் பாருங்க. நான் முன்னேறி உங்கள என் கால்ல விழ… வேண்டாம் புருஷனா இருக்கீங்க… எங்கிட்ட வந்து தஞ்சம் அடைய வைக்கல என்பேரு அமுதா இல்லை.
அசோக்குமார்: போடி செத்து சீரழிஞ்சி போயிடாதே. ச்ச இந்த வீட்ல வரவர நிம்மதியே இல்லாம போச்சி.