தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் கைது; பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த திட்டமா?
1 min read
Swapna Suresh arrested in gold smuggling case
11-7-2020
தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தல் தங்கம் பயங்கரவாத செயல்களுக்காக கடத்தப்பட்டதா எனபது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.
இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் இந்தக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது
இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடி வந்தனர். முதலில் அவர் தமிழகத்தில் பதுங்கி இருக்கக்கூடும் என தகவல் வெளியானது.
ஆனால் பெங்களூருவில் பதுங்கி இருந்தார். அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று(சனிக்கிழமை) கைது செய்தனர்.
ஸ்வப்னாவுடன் அவரது குடும்ப உறுப்பினர்களையும்
என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா நாளை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அதன்பின் தங்க கடத்தல் தொடர்பாக ஸ்வப்னாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத செயலுக்கு…
இந்த கடத்தல் தங்கம் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான கோணத்திலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.