இரட்டை சொற்கள்-4 / கோவில் குளம்
1 min readDouble words in Tamil / Kovil kulam By Muthumani
- கோவில் குளம் – முத்துமணி எம்.ஏ. எம்.பில்.
கல்யாணமாகி ஆறு வருடங்கள் ஆயிற்று. இன்னும் பிள்ளை உண்டாகவில்லை. ஒரு புழு பூச்சி வைக்கவில்லை என்று வருத்தப்படும் போது. ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கா அலைவதை விட்டுவிட்டு நாலு கோவில் குளம் சுற்றிவிட்டு வாருங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். என்று பெரியவர்கள் புத்திமதி சொல்வதுண்டு.
கோவிலுக்குச் சென்று குழந்தை வரம் வேண்டலாம். அதை கோவில் என்று சொல்கிறார்கள். குழந்தை வரம் வேண்டி அனேகக் கோவில்களில் தொட்டில் கட்டிப் போடுவது, சிறப்பு வழிபாடு நடத்துவது இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ராமாயணத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடந்ததாக அறிகிறோம்.
அப்படியானால் குளம் என்ற சொல் எதைக் குறிக்கிறது?.
கோவிலுக்குப் போவது சரி. குளத்திற்கு எதற்குச் செல்ல வேண்டும்? குழந்தை உண்டாவதற்கும் குளத்திற்கும் என்ன தொடர்பு? என்று யோசித்தால் இரண்டு விடைகள் தோன்றுகின்றன.
ஒன்று நிறைய கோவில்களில் குளங்களும் உண்டு. எனவே கோவில் குளம் என்று சேர்த்துச் சொல்லி இருக்கலாம். மற்றொன்று கோவிலுக்கு மட்டும் சென்று வந்தால் போதாது. எங்காவது நீர்நிலைகள் நிறைந்த காடு மலை போன்ற பகுதிகளுக்கு இருவரும் சேர்ந்து பயணம் செய்து இன்பமாக இருந்து விட்டு வாருங்கள் .குழந்தை உண்டாகும் என்பதாகக் கூட இருக்கலாம்.
பொதுவாகக் காடு, மலை, நீர் நிறைந்த பகுதிகள் மனிதனின் இன்பம் அனுபவிக்கும் உணர்வைத் தூண்டுகின்ற இடங்களாக இருக்கின்றன. குறிஞ்சித் திணையின் உரிப்பொருள் கூடலும் கூடல் நிமித்தமும்.இதுதான் பின்னாளில் ஒரு வேளை தேன்நிலவு என்று மாறி இருக்கும்.
எப்படியோ கோவில் குளம் என்பதற்கு ஒரு விளக்கத்தைப் பார்த்தாயிற்று.