இரட்டை சொற்கள் / 5 நோய் பேய்/ 6 வயித்தால வாயால
1 min readDouble words inTamil 5 and 6 bY Muthumani
இரட்டை சொற்கள் / முத்துமணி எம்.ஏ.எம்.பில்.
- நோய் பேய். வேற…. எடுத்துக்காட்டு வேண்டாம். குழந்தையின்மையை எடுத்துக்கொள்வோம். நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லை என்றால். அத் தம்பதியர் ஊரிலுள்ள முக்கியமான மருத்துவர்களிடம் போய் ஆலோசனையும் மருத்துவமும் பெறுவார்கள். பின்னர் யாராவது எடுத்துச் சொல்லி பெரிய பெரிய ஊர்களில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்று பலன் பெறுவது உண்டு. இவ்வாறு செய்த பின்னும் பயனற்றுப் போவோரும் உண்டு.
- இதற்கு மாறாகச் சிலர் குழந்தை இல்லை என்றால் மருத்துவர்களை நாடாமல், கடவுளையே நம்பி அவனை விடவா பெரிய மருத்துவர்கள் இருக்கிறார்கள்? என்று கருதி கோவில்களில் வேண்டிக்கொண்டு, நேர்த்திக்கடன் செலுத்துவதாக உறுதி கொண்டு, அத்தோடு நில்லாமல் வீட்டில் பல்வேறு வகையான வழிபாடு பூசை புனஸ்காரம் செய்து கொள்வதோடு, தோசம், பரிகாரம் இப்படி பல்வேறு வகைகளிலும் முயற்சிகளை மேற்கொள்வது உண்டு. இதில் வெற்றி பெறுவோரும் உண்டு தோற்றுப் போவோரும் உண்டு. அதனால் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள் இரண்டையும் நம்பி இரண்டையும் செய்யுங்கள் நோய்க்கும் பார் பேய்க்கும் பார். அதாவது அறிவியல் பூர்வமாக மருத்துவத்தையும் மேற்கொள். ஆன்மிகம் தொடர்பான நம்பிக்கைகளையும் கைவிடாமல் அதையும் பின்பற்று என்பது அவர்கள் கருத்து. இரண்டிலும் உண்மை இருக்கிறது.
எனவே இன்றுவரை எந்த நோயாக இருந்தாலும் நாம் மருத்துவம் பார்த்த கையோடு மேலே சொல்லப்பட்ட நம்பிக்கை சார்ந்த செயல்களையும் செய்யாமல் இருந்ததில்லை. - வாயால வயித்தால.. என்னத்தத் தின்னுச் தொலைச்சா ன்னு தெரியல?. நாலு நாளா வாயால வயித்தால நிக்காமப் போகுது. என்று வருத்தப்பட்டாள் ஒரு தாய். நமக்குப் புரிகிறது அவளது குழந்தை எதையோ தின்னக் கூடாததைத் தின்றதால் குழந்தை வாந்தி எடுக்கிறது. அக்குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டிருக்கிறது.
வாயாலப் போகுது என்ற சொல் வாந்தியையும், வயித்தாலப் போகுது என்னும் சொல் வயிற்றோட்டம் இருக்கிறது என்பதையும் குறிக்கிறது. வாய்வழியாக உட்கொண்ட உணவு செரிமானத்தை வாயிலேயே தொடங்குகிறது. வாயில் உமிழ்நீர் கலந்ததும் செரிமானத்தில் ஒரு பகுதி நிறைவுற்று விடுகிறது. வாயில் நாம் வைத்த பொருள் இரைப்பைக்குள் சொல்லும்போதே வேறு பொருளாக மாற்றப்பட்டு விடுகிறது.வாயில் நடக்கவேண்டிய செரிமானம் முழுமையாக நடந்து முடிந்தால் மட்டுமே இரைப்பை அப்பொருளை ஏற்றுக்கொள்கிறது.
இரைப்பை செரிமானத்தின் அடுத்த வேலையை செய்கிறது. அங்கே நடக்கும் அந்த வேதி மாற்றங்கள் சரியாக நடைபெறவில்லை என்றால், இரைப்பைக் குமட்டிக்கொண்டு அரைகுறையாக செரிமானம் ஆனது வாய் வழியாக வெளியே வந்துவிடும். இதைத்தான் வாந்தி என்கிறோம்.
இரைப்பை செரிமானம் முடிந்து சிறு குடலுக்குள் சென்று அங்கு சில செரிமான வேலைகள் நடைபெறுகின்றன. அது முடிந்த பிறகுதான் சத்து ரத்தத்தோடு கலக்கிறது. கழிவு பெருங்குடலுக்கு அனுப்பப்படுகிறது. இப்போது சிறுகுடலில் நடைபெறும் செரிமான வேலையில் பாதிப்பு ஏற்படுமானால், அது முறையான மலக் கழிவாக இல்லாமல் வேறு மாதிரியாக பின்புறமாக வெளியேறுகிறது. இதை வயிற்றோட்டம் என்று நாகரீகமாகச் சொன்னாலும் முன்னோர்கள் வயித்தால என்று சொன்னார்கள்.
அப்படியானால் இரைப்பையில் சரியான ஜீரணம் நடைபெறவில்லை என்றால் வாந்தி ஏற்படுகிறது. சிறுகுடலில் சரியான ஜீரணம் ஏற்படவில்லை என்றால் வயிற்றோட்டம் ஏற்படுகிறது. இதை நன்கு உணர்ந்து கொண்ட நம் பெரியவர்கள் வாய் ஜீரணித்து இரைப்பை ஜீரணிக்காது போனதால் அதை வாயால் என்றும், சிறுகுடல் ஜீரணிக்காமல் விட்டபடியால், இரைப்பையை வயிறு என்று குறிப்பிட்டு, வயித்தால என்றும் கூறினார்கள் போலும்.