தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இணையாக டிஸ்சார்ஜ்
1 min readDischarge parallel to corona effect in Tamil Nadu
31-7-2020
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இணையாக டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் வந்துவிட்டது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேநேரம் குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது ஆறுதல் தருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பற்றி தினமும் மாலையில் சுகாதாரத் துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு :-
தமிழகத்தில் இன்று மட்டும் (வெள்ளிக்கிழமை) 5,881 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் 5,850 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 31 பேர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 120 ஆய்வகங்கள் மூலம் இன்று மட்டும் 60,276 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 26 லட்சத்து 58 ஆயிரத்து 138 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,492 பேர் ஆண்கள், 2,389 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,49,107 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 96,725 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது.
இன்று மட்டும் 5,778 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 956 ஆக உள்ளது.
97 பேர் சாவு
இன்று மட்டும் கொரோனாக்கு 97 பேர் இறந்தனர். அதில், 68 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 29 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 57,968 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 12 ஆயிரத்து 263 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 2 ஆயிரத்து 926 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 30 ஆயிரத்து 670 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.