எச்.வசந்தகுமார் எம்.பி. உடல் சொந்த ஊரில் அடக்கம்
1 min readH. Vasanthakumar MP The body was buried in his own village
30-8-2020
மரணம் அடைந்த எச்.வசந்தகுமார் எம்.பி.யின் உடல் சொந்த ஊரான, கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
எச்.வசந்தகுமார்
கன்னியாகுமரி தொகுதி, காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தவர் எச்.வசந்தகுமார். சிறந்த தொழில் அதிபரான இவர் தனது கடின உழைப்பால் உயர்ந்தவர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. உயர்தர சிகிச்சை அளித்தும், பலன் அளிக்காமல், நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட ஏராளமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
சொந்த ஊருக்கு…
எச்.வசந்தகுமரின் உடல் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து, நேற்று(சனிக்கிழமை) காலை 7-15 மணிக்கு, தி.நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலைப் பார்த்து, மனைவி தமிழ்செல்வி, மகள் தங்கமலர், மகன்கள் நடிகர் விஜய்வசந்த், வினோத்குமார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
அதன்பின் அவரது உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகதீசுவரம் கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக பகல் 11-45 மணிக்கு, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் முன்பு சிறிது நேரம் வைக்கப்பட்டது.
இன்று காலை, 11-30 மணிக்கு அகஸ்தீவரத்தில், வசந்தகுமாரின் பெற்றோர் கல்லறைகள் அமைந்த குடும்ப தோட்டத்தில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.